படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய தலைவர்கள் தவிர ஏனைய விடுதலைப்புலிகளும் அவர்களது குடும்பத்தினரும் மன்னிக்கப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
”இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்திற்கு பிரபாகரன் ஒரு தடையாக இருந்து வந்தார். அவரது தற்போது இறந்துவிட்டதால், தமிழ் மக்களின் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காண அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று தலைமுறையாக நீடித்து வரும் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா தனது அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும். இப்பிரச்னையில் இந்தியா சரியான வழியை பின்பற்றி வருகிறது.
தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளையும் புலிகள் தடுத்துவிட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை புறக்கணித்தது மற்றும் அதை அமல்படுத்துவதை தடுத்ததன் மூலம் தமிழ் மக்கள் அடிப்படை உரிமைகளை பெற முடியாமல் விடுதலைப் புலிகள் வஞ்சித்துவிட்டனர்.
எனவே, தமிழ் மக்களின் பின்னடைவுக்கும் துயரங்களுக்கும் பிரபாகரன் மட்டுமே காரணம். பிரபாகரனின் மரணம் தவிர்க்க முடியாத சம்பவம். ஆயுதங்கள் மூலம் போராடி அதனாலேயே வீழ்ந்த அவரை நான் மன்னிக்க தயாராக இல்லை.
பல படுகொலைகளுக்கு நேரடியாக காரணமான தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களைத் தவிர ஏனைய விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். முன்னாள் விடுதலைப் புலிகளின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு தரவேண்டும்.
ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு ஏற்பட்ட பல வாய்ப்புகளை பிரபாகரன் தவறவிட்டார். தற்போது அவர் இல்லையென்பதால், தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான பாதை தெளிவாக உள்ளது. எனவே, இதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.
தற்போது விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக செயல்படலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். இப்படிப்பட்ட இயக்கங்கள் அதன் தலைவர்களை நம்பியே இருக்கும். அத்தலைவர்கள் மரணமடைந்தால் அவர்களால் செயல்பட முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதா அல்லது இப்படியே தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்ய அப்பிரச்னையை மக்களிடம் விட்டுவிட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறும்போது நான் அங்கு முதல் அமைச்சர் பதவிக்கு போட்டியிடுவேன். தமிழ் மக்களின் பேச்சுரிமை, பணி சுதந்திரம் ஆகியவற்றுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன். நிரந்தர அமைதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் அடிப்படையாக இருக்கும்” என்றார் டக்ளஸ் தேவானந்தா.
53 வயதான டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப் புலிகளின் கொலை முயற்சிகளில் இருந்து 13 முறை உயிர் தப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது