Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஜய் ரி.வி இன் பின்னால் மறைந்துகொள்ளும் கோடரிக்காம்புகள்

vijayஇலங்கை இனப்படுகொலைக்குத் துணைசென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்ற போது தமிழ் ஈழம் கிடைத்துவிட்டது போன்று போலிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ் இன வெறியர்கள் இறங்கினார்கள். இலங்கை அரசு குரூரமான புலிகள் இயக்கத்தை அழித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றது என்று டேவிட் கமரன் கூறியபோது பின்னால் பதுங்கியிருந்து வேடிக்கைபார்த்தார்கள்.

டேவிட் கமரனோடு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பிரித்தானிய வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் வில்லியம் ஹக் தனியார் பல்கலைக் கழகத்தைத் திறந்துவைத்து இலங்கையின் உயர் கல்வி வரலாற்றை அழுக்காக்கிய போது தமிழ் இன வெறியர்கள் தலைமறைவாகினர்.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்குவரும் பேரினவாத பாசிச அரசுகள் ஒவ்வொரு தடவையும் கல்வியைத் தனியார் மயமாக்க முனையும் போதும் சிங்கள – தமிழ் மக்களின் போராட்டங்களால் அது முறியடிக்கப்பட்டது.

இந்தத் தடவை யாருடைய எதிர்புமின்றி ஏழைகளின் கல்வி பிரித்தானிய அரசால் நாசப்படுத்தப்படுவதற்கான அடிக்கல்லை வில்லியம் ஹக் நாட்டி வைத்தார். அதுவும் ‘தேசியம் பேசும்’ பிழைப்புவாதிகளின் ஏகோபித்த ஆதரவோடு.

இலங்கையில் நடைமுறையிலுள்ள முழுமையான இலவசக் கல்வித்திட்டம் தெற்காசியாவின் கல்வியறிவு பெற்ற நாடாக இலங்கையை மாற்றியிருந்தது. வசதியற்ற ஏழைகளின் குழந்தைகள் கூடப் பல்கலைக் கழகக் கல்வியை கற்றுப் பட்டதாரியாக வாய்ப்பை வழங்கிய மூன்றாமுலக நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் இலவசக் கல்வியில் கைவைக்கத் துணிந்ததில்லை.

ஈழப் போராட்டம் தீவிரமடைந்ததன் முக்கிய காரணங்களில் இலவசக் கல்வியில் தரப்படுத்தல் முக்கியமானதாகும். அந்த இலவசக் கல்வியே பறிக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படாத மக்களில் அக்கறையற்ற விசமிகளான தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் தமிழ் வெறியர்கள் மூச்சுக்கூட விடவில்லை.

கொழும்பின் மீரிகமவில் 120 ஏக்கர் காணியில் பிரித்தானியாவின் லங்ஷையர் பல்கலைக்கழகத்தின் வளாகம் திறந்துவைக்கப்பட்டது. பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக் திறந்துவைத்த பல்கலைக் கழகத் திட்டத்திற்கு 75 மில்லியன் பவுண்ஸ்களைக் கொட்டியிருக்கிறார்கள்.

தமிழ் சிங்கள ஏழைகளின் அடிப்படை உரிமையில் கைவைக்கும் இந்த நிகழ்வை தமிழின வெறியர்கள் கண்டுகொள்ளவில்லை. பிரித்தானியாவை அவர்கள் நிபந்தனை இல்லாமல் ஆதரித்தார்கள்.

தமிழ் நாட்டில் கல்வி வியாபாரத்தில் உச்சத்திலிருப்பவர்கள் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தினர். பல மில்லியன்கள் பெறுமதியான கல்விக்கூடங்களை தமிழ் நாடுமுழுவதும் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம் நிறுவனத்தினர் தமது கல்வி வியாபாரத்திற்காக ராஜபக்ச இனக்கொலை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்கள்.

எஸ்.ஆர்.எம் நிறுவனம் தமிழ் நாட்டில் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி சேவையையும் நடத்தி வருகிறது.

தமிழ் மக்கள் உட்பட முழு இலங்கை மக்களதும் கல்வி உரிமையை அழிக்கும் பிரித்தானிய அரசையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும் இனவெறியர்கள் ஆதரிக்கிறார்கள்.
தமிழர்களே ஒன்றிணையுங்கள் என்ற தலையங்கத்தில் தமிழ் இனவெறி நாசகார சக்த்திகள் காப்பாற்ற முயல்வது தமிழர்களை அல்ல எஸ்.ஆர்.எம் போன்ற பல்தேசிய வியாபாரிகளையே.
விஜய் தொலைக்காட்சி என்ற கலை வியாபார நிறுவனம் தமிழை அழித்து சீரழிவுக் கலாசாரத்தைப் பரப்புகிறது. இதனைக் கண்டுகொள்ளாத தமிழ் இன வெறியர்கள் இலங்கையில் அது நிகழ்ச்சிகளை நடத்துவது ‘மட்டுமே’ தவறு என்கின்றனர். மற்றப்படி விஜய் தொலைக்காட்சியோடு அவர்கள் எந்தவகையிலும் முரண்பட்டுக்கொள்ள மாட்டார்கள்.
பிரித்தானிய அரசு, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றிலிருந்து இலவசக் கல்வியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு விஜய் தொலைக்காட்சி, இந்திய சினிமா போன்றவற்றின் கலாச்சாரச் சீரழிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அவசியமானதாகும்.
புதிய தலைமுறைக்கு எதிராகவோ, இந்திய சினிமாக் கலாச்சாரத்திற்கு எதிராகவோ இதுவரை மூச்சுக்கூட விடாமல் அவற்றுடன் பங்காளர்களாகச் செயற்படும் தமி இனவெறியர்கள் விஜய் ரி.வியின் ஒரு நிகழ்ச்சிக்கு எதிராக மட்டும் தொடையத் தட்டுவது ஏன்?
அவர்கள் நேர்மையானவர்களானால் குறைந்தப்பட்சம் விஜய் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தென்னிந்தியாவின் சீரழிந்த சினிமாக்கள் போன்ற கல்வி மற்றும் கலை வியாபாரிகளைத் தடை செய்து ஈழத்துக் கலைகளை ஊக்குவிக்கும் போராட்டத்தை நடத்தட்டும் பார்க்கலாம்.

கொழும்பில் சுப்பர் சிங்கர் நடக்கக்கூடாது:கௌதமனின் தாகம் தமிழீழ தாயகம்

 

Exit mobile version