இந்தியாவின் ஆன்மா அதன் குடும்ப அமைப்பே என்று சொல்லப்படுகிறது. ஆனால் குடும்பத்தின் ஆன்மா என்பது சாதி, மதங்களால் கட்டுப்பட்டுள்ள நிலையில் குடும்பம் என்னும் நிறுவனம் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறை இந்தியாவில் அதிகம், சதி, உடன்கட்டை ஏறுதல் போன்ற மூடப்பழக்கங்கள் இருந்த பழைய காலமும் சரி இன்றைய இந்தியாவும் சரி ஆணாதிக்க அமைப்பு முறையால் நடத்தப்படுவதுதான். இந்நிலையில் நாடு முழுக்க ஆதிக்க சாதி வெறி, மதவெறியால் குடும்பத்திற்குள் கொல்லப்படும் பெண்களின் கொலைகளை கௌரவக் கொலைகள் என்றே குறிப்பிடுகின்றன. இந்நிலையில் வரதட்சனை கேட்பது குற்றமாக கருதப்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியப் பெண் வாழ்வில் மேலும் இடியாக இறங்கியுள்ளது. வரதட்சனை தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எஸ்.கோதா, ஏ.எம்.பட்நாயக் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.வரதட்சனை கேட்டு ஒரு பெண்ணை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால் அது குற்றமாக கருதப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேரிட்டாலும் அது குற்றம் என கூறியுள்ள நீதிபதிகள், அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.அது தவிர்த்து சாதரணமாக வரதட்சனை கேட்பது குற்றமாக கருதப்பட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.வரதட்சனை கேட்பதும், கொடுப்பதும் தவறு என்று கருதப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.