Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு – கிழக்கு மாகண சபைத் தேர்தல் விரைவில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை?

வடக்கு மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடாத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை உறுதிப்பத்தவும் அரசியல் நிறுவனங்களை செயற்படுத்தவும் வேண்டியது முக்கிய விடயம் என்பதனால் விரைவில் அங்கு மாகாண சபைத்தேர்தலுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

அந்த அறிவிப்பை விட இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். வடக்கு மாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடாத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாவும் அமரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடான பேச்சு வார்த்ததை நடைபெறும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக கடந்த வாரத்தில் கூட்டமைப்பினர், அரசாங்கம் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நலன்புரி செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்கும் எனத்தெரிவித்திருந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியும் பரிவாரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் 65வது உச்சி மாநாட்டிற்கு சென்றிருக்கின்ற வேளையில் இவ்வாறான ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பற்றி அறிவிப்பை வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல, வட மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறமுடியாது எனத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கம் தம்முடன் பேச்சு வார்த்தையொன்றிற்கு தயாராகி வருவதை வரவேற்றிருக்கிற கூட்டமைப்பினர், மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அதற்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இதயசுத்தியுடனான முன்னெடுப்புக்கள் அவசியமென கருத்து வெளியிட்டுளனர். ஆனால் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த தீர்மானங்களை வெளியிடுவோமெனக் கூறியிருந்து போதிலும் அதனை அவர்கள் இன்னமும் வெளியிடவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிர்காலத்திலும் மக்கள் முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம் முன்வைக்கப்படுமா என்பது சந்தேகமே!

அண்மைக்காலங்களில் அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அங்கு ஒரு தேர்தல் வரவிருப்பதைக் காட்டுகிறது எனப்பேசப்படுகிறது. பல முக்கிய அமைச்சர்கள் வடபகுதிக்கு பல தடவைகள் சென்று மக்களைச் சந்தித்து வந்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவையும் வன்னிக்கு கூட்டிச்சென்றிருக்கிறார்கள். அவர் அங்கு கூட்டமைப்பினர் குறித்து விமர்சனங்களை முன்வைத்து தனது பணியைத் திறம்பட மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையில் ஜே.வி.பி. யினரும் வடபகுதியில் தமது அரசியல் பணிகைள விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதே வைள அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிற மற்றும் இணைந்து கொள்ள விரும்புகிற தமிழ் தலைவர்கள் தமிழ் அரங்கம் எனும் அரசியல் கூட்டமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தகவல் : விஜய்

Exit mobile version