12.10.2008.
யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் எந்தவொரு வகைப்படுத்தல்களுக்குள்ளும் அடங்காத வாழ்வொன்றையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடரும் படுகொலைகள், இயற்கை அனர்த்தங்கள் என குடாநாட்டு விதவைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பகுதியுடன் 30 ஆயிரத்தினை தாண்டிவிட்டது. அதிலும் 50 வயதிற்கும் குறைவான இளம் விதவைகளின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரத்தினைத் தாண்டிவிட்டதாக யாழ்.செயலகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
குடாநாட்டிலுள்ள விதவைகள் முக்கியமாக ஐந்து வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகளால் கணவரை இழந்தோர், விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்கள் நோய்களால் கணவரை இழந்தோர் மற்றும் தற்கொலை செய்து கொண்டமையால் விதவைகளானோர் என அது உள்ளடங்குகின்றது. இவ்வாறு விதவைகளென அடையாளங்காணப்பட்டோரில் சுமார் 11 ஆயிரம் பேர் பிறரது எந்தவொரு உதவியும் இன்றியே வாழ்ந்து வருகின்றமையும் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.