Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லீம்களின் மையவாடியையும் ஆக்கிரமிக்கும் மகிந்த பாசிசம்

பொத்துவில் – கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,,
‘கொட்டுக்கல் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மையவாடியில் படையினருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் எனப் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை எல்லைக்கான வேலியும் போடப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்த நிலையில் முஸ்லிம் மையவாடி ஆக்கிரமிப்பு படையினரால் பொத்துவிலிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘நமது மண்ணை நாம் காப்பாற்றவுள்ளோம்’ எனப் பொத்துவில் பிரதேச சபையின் புதிய மாடிக்கட்டடத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடிக்கல் நட்டுவிட்டு உரையாற்றும்போது உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.’
இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடைய மோதலை தூண்டுவதும் அவற்றை அழிப்பதும் ஒடுக்கும் அதிகார வர்க்கங்களது அடிப்படைப் பண்பு. இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறை தோற்றம்பெற்ற காலம் முழுவதும் இலங்கைத் தரகு முதலாளித்துவ அதிகார அமைப்புக்கள் இத்தகைய செயலையே மேற்கொண்டுவருகின்றன. இன்று மகிந்த பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது பாசிச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சூழலில் முஸ்லீம் தேசிய இனம் தனது சுய நிர்ணய உரிமைக்கான முழக்கத்தை வடகிழக்குத் தமிழ்த் தேசிய இனத்தோடும், மலையக தமிழ்த்தேசிய இனத்தோடும், ஒடுக்கப்பட்ட சிங்கள உழைக்கும் வர்கத்தோடும் இணைந்து முன்வைப்பது அவசியமானது.

Exit mobile version