Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மும்பாய் தாக்குதல் : 21 பயங்கரவாதிகள் பலி

மும்பையை கடந்த 62 மணி நேரமாக தொடர் பீதியில் வைத்திருந்த பயங்கரவாதிகள் அனைவரும் இன்று நண்பகலுக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் வெடிகுண்டுகள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது.

தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் பங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் இன்று நண்பகலுக்கு முன்னர் தேசிய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் மும்பையைக் கலக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிரான “ஆபரேஷன் சைக்ளோன” முடிவுக்கு வந்ததாக தேசிய பாதுகாப்புப் படை தலைவர் ஜே.கே.தத் தெரிவித்தார்.

எனினும், தாஜ் விடுதியில் எங்கேயாவது வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் பதுக்கி வைத்துள்ளனரா என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

கடந்த 26ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உட்பட மும்பையின் 11 முக்கிய இடங்களில் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் வெறித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ட்ரைடென்ட், தாஜ்மஹால் நட்சத்திர விடுதிகள், நாரிமன் இல்லம் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் அங்குள்ளவர்களை பிணையக் கைதிகளாக பிடித்தனர்.

பிணையக் கைதிகளில் அயல்நாட்டவர்களும் இருந்ததால் உலகின் கவனம் மும்பையின் பக்கம் திரும்பியது. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நட்சத்திர விடுதிகளில் அதிரடிப்படை, பயங்கரவாத ஒழிப்பு படை, கமாண்டோ படை வீரர்களும் மும்பையில் குவிக்கப்பட்டனர்.

சுமார் 62 மணி நேரம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில், அவர்கள் பிடியில் இருந்த இரண்டு விடுதிகளையும் பாதுகாப்பு படையினர் இன்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மொத்தம் 21 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேச பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

Exit mobile version