யுத்தம் முடிவடைந்து 20 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றங்கள், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் போதிய அளவில் இல்லையென்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய ஏது நிலைகளும் பிரகாசமானதாக இல்லை என ஐ.நா.வின் அதிகாரி கதரின் பிரேக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளரும் அவசர நிவாரங்களுக்கான பிரதி இணைப்பாளருமான கதரின் பிரேக் இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தின் போது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்து விட்டு இந்தக் கருத்தினைக் கூறியிருக்கிறார்.
கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேலும் கருத்துத் தெரிவித்த கதரின் பிரேக், வடக்கில் இடம்பெற்ற மோதல்களினால் இடம் பெயர்ந்திருந்த நிலையில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப நாளாந்தம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அம்மக்களின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்தே கட்டியெழுப்ப வேண்டிய தேவையிருக்கிறது எனக்கூறியிருக்கிறார்.