Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!

  மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

  இந்திய-திபெத் எல்லைக் காவல்படை உருவான 48-வது ஆண்டு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

  மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுடன் அந்தந்த மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவும்.

  மாநில அரசுகளுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் அதற்கு முன் மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்றார்.

 தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். இதுவரை 4 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

  மும்பைத் தாக்குதல் சம்பவ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிபதி அதிலிருந்து விலகியது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்றார் அமைச்சர் ப.சிதம்பரம் .

 

 

Exit mobile version