Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?

 தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது.
 
யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் யாழ் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே தகவல் ஒன்றினை அடுத்து இன்று சாவகச்சேரி டச்சு வீதிப் பகுதியை சுற்றி வளைத்த படையினரும் காவற்துறையினரும் தேடுதல்களை நடத்தினர். அவ்வேளையிலேயே குறித்த வீடொன்றிலிருந்து குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது  சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22460&cat=1

Exit mobile version