Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்!

சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 52 . இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக்க வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.

இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரைச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச்சென்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியைத் தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சந்திரசேகரன் உலகளாவிய ரீதியில் தமிழ்த் தலைவராக மதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார்.மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளயுலகுக்கும் கொண்டு சென்றது.

Exit mobile version