Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகத் தமிழர் குறித்து தமிழகத்தில் போதிய விளக்கமில்லை!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழக மக்களுக்கு போதிய விளக்கமில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய இசைப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதிகள் தெரிவித்தனர்.

அண்மையில் இவர்கள் நுவரெலியாவுக்கு விஜயம் செய்த போது எமது இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது :

“தமிழகத்தைப் பொறுத்த வரை இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லுகின்ற போது இலங்கையில் வடக்குக் கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள் குறித்தே பேசுகின்றனர்.

ஆனால் இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களோ ஏனையவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

எனினும் இந்த மக்கள் குறித்து நாம் பங்குபற்றுகின்ற இசை நிகழ்வுகளில் கூறிவருகின்றோம். இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் இந்த மக்கள் தனித்துவத்துடன் வாழ்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மலையக மக்களின் கிராமிய இசைப்பாடல்களை தொகுத்து எதிர்காலத்தில் எனது குரலில் பதிவு செய்து இறுவட்டுகளாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன். மலையகத்தில் நுவரெலியா பகுதி இயற்கை அழகு மிக்கது. அதுபோல் இந்த மக்களின் வாழ்க்கையிலும் சுபீட்சம் ஏற்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

Exit mobile version