Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலைகக மக்களின் வாழ்வுரிமைகளைப் பேரினவாதிகளுக்கு அடகுவைத்த தலைமைகள்: புதிய ஜனநாயகக் கட்சி

மலையக மக்களின் இனத்துவ உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் சம்பள உயர்வுக் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியாத மலையத்தின் தொழிற்சங்க – அரசியல் தலைமைகள் வழமை போன்று ஏமாற்றும் பசப்பு வாக்குறுதிகளைக் கொடுத்தும் பணத்தை வாரி இறைத்தும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளைக் கேட்டு நிற்கிறார்கள். மாறி மாறிப் பதவிக்கு வந்து மலையக மக்களை இனத்துவ வழிகளிலும் வர்க்க அடிப்படையிலும் அடக்கி ஒடுக்கி வந்த இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சிகளின் சின்னங்களான வெற்றிலையிலும் யானையிலும் மலையகத் தலைமைகள் வாக்குக் கேட்பது தன்மானம் இழந்த வெட்கத்திற்குரியதாகும். இது மலையக மக்களின் தனித்துவமான இன உரிமைகளையும் அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளையும் பேரின வாதிகளுக்கு அடகு வைத்து பதவிகள் பெற முற்படும் பிற்போக்குத்தனமாகும். இத்தகைய நிலையை மலையக மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்தித்து இத் தேர்தலில் தூர நோக்குடன் செயல்பட வேண்டும். அதே போன்று மலையகத்தில் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு மக்கள் பேரினவாத ஒடுக்கு முறை ஆட்சிக்கு குடைபிடித்து பதவிகள் பெற்று சகல உழைக்கும் மக்களின் காதுகளிலும் பூச் சுற்றி வரும் மலையகப் பிற்போக்கு தொழிற்சங்க – அரசியல் தலைமைகளை நிராகரிக்க வேண்டும். அதே வேளை மலையகத்தில் மாற்று அரசியலையும் வெகுஜனப் போராட்ட மார்க்கத்தையும் முன்னெடுத்து வரும் புதிய – ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளுக்கு பலம் சேர்க்க மலையக மக்களும் அங்கு வாழும் வடக்கு கிழக்கு மக்களும் எமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். கேத்தல் சின்னத்தில் நுவரேலியா மாவட்டத்தில் புதிய – ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தலைமையில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவிற்கு வாக்களிக்குமாறு புதிய – ஜனநாயக் கட்சியின் மத்திய குழு அம்மாவட்ட மக்களை வேண்டிக் கொள்கிறது. 
இவ்வாறு புதிய ஜனாநாயக கட்சியின் மத்திய குழு சார்பாக அதன் பொதுச் செயலாளார் சி.கா. செந்திவேல் மத்திய மாகாண சபைத் தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கும் தேசிய இனத்துவ உரிமைக்கும் நியாமான சம்பள உயர்வுக்கும் உரிய கொள்ளைகளை முன் வைக்க முடியாது ஏமாற்றுத் தலைமைகளாக இருந்து வந்தவர்களை மலையக மக்கள் இச் சந்தர்ப்பத்தில் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு போன்று வேடம் போட்டு விட்டு ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகள் பெற்று யுத்தத்திற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து வரும் மலையகத் தலைமைகளை மலையக மக்கள் இத் தேர்தலில் புரிந்து கொள்ளல் வேண்டும். ஆளும் ஜ.ம.சு.முன்னணியும் எதிர்க்கட்சியான ஜ.தே.கட்சியும் பேரினவாதக் கட்சிகள் என மக்கள் விளங்கிக் கொண்டால் அவற்றின் பட்டியல்களில் நிற்கும் மலையகத் தலைமைகளுக்கு வாக்களிப்பதில் என்ன தன்மானம் இருக்கிறது என்பதை மலையக மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
எனவே புதிய ஜனநாயக கட்சி மாற்று அரசியலையும் வெகுஜனப் போராட்டப் பாதையிலும் மலையத்தில் வழிநடந்து வரும் கட்சியாகும். அதன் அடிப்படையிலேயே மக்களுக்கு அழிவு தரும் மேல்கொத்மலைத் திட்டத்தை எதிர்த்து வெகுஜனப் போரட்டத்தை நடாத்தியது. அதனைக் காட்டிக்கொடுத்து சலுகைகள் பெற்றவர்கள் இன்று தேர்தலில் நின்று வெட்கம் ரோசம் இன்றி வாக்குக் கேட்கிறார்கள். ஆனால் அப்போராட்டத்தில் முன்னின்ற புதிய ஜனநாயக கட்சியின் ஜந்து இளம் உறுப்பினர்கள் பழிவாங்கல் அடிப்படையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களாகச் சிறையில் இருந்து வருகிறார்கள். அத்துடன் மலையத்தின் இளைஞர் யுவதிகள் நூற்றுக் கணக்கில் சிறைகளில் இருந்தும் வருகிறார்கள். இவை யாவும் மலைய மக்களின் கவனத்திற்கும் சிந்தனைக்கும் கேள்வி எழுப்பல்களுக்கும் அவசியமனவைகளாகும். எனவே ஏமாற்று வார்த்தைகளுக்கும் பணத்தை வாரி இறைத்து மயக்கும் அற்ப சலுகைகளுக்கும் ஆதிக்க தொழிற்சங்க அரசியல் போக்கிற்கும் வளைந்து கொடுக்காது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு வேண்டுகின்றது. இதனை நுவரேலிய மாவட்டத்தில் கேத்தல் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயககட்சிக்கு வாக்களித்து மக்கள் சிந்தனையையும் தொழிலாளர்களின் பலத்தையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.  
 தகவல் :  புதிய ஜனநாயகக் கட்சி – இலங்கை

Exit mobile version