– தமிழ் பேசும் மக்களுக்கு மனோ கணேசன் அழைப்பு

மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகிய கட்சி தலைவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எம். ஏ. சுமந்திரன் எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை மக்கள் பிரதிநிதிகளும், மூன்று கட்சிகளினதும் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொள்ளும் இந்த மேதின நிகழ்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இனவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்க இன்று தமிழ், முஸ்லிம் மக்களுடன் பெருந்தொகையான சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் எம்முடன் கரங்கோர்த்துள்ளார்கள். கொழும்பில் சிங்கள சகோதர மக்களுடன் சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ தமிழ், முஸ்லிம் மக்கள் தயார் என்ற செய்தியை நமது கூட்டு மேதினம் மூலம் நாம் அறிவிப்போம். ஆகவே இந்த மேதின நிகழ்வில் கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு கலந்துகொண்டு எங்கள் கரங்களை பலப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
மே முதலாம் திகதி நண்பகல் 1 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பித்து மத்திய கொழும்பு நகர வீதிகள் வழியாக சென்று மீண்டும் பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்துக்கு திரும்பி அங்கு மேதின பொதுக்கூட்டம்நடைபெறும். எனவே மே முதலாம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்திற்கு வரும்படி தமிழ், முஸ்லிம் மக்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இன்று சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இனவாதத்திற்கான போராட்டமாக அரச ஆதரவாளர்கள் காட்ட முற்படுகின்றனர். இந்த நிலையில் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று சொல்லப்படுவது அவசியமானது