
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ இன்று பீகாரில் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டெல்லி சென்றனர்.
இன்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற போது நாடாளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடையே வைகோ பேசியதாவது:
“இங்கே தலைநகர் டெல்லியில் எதற்காக இந்தப் போராட்டம் எனில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொடுத்து இந்திய அரசு போருக்கு உதவியாக இருந்தது. ஆஸ்பத்திரிகளின் மீது குண்டு வீசினார்கள். லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார்கள். ஆனால் அதற்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்தது. டெல்லியில் ஒரு இளம் பெண் கற்பழிக்கப்பட்டது எங்கள் நெஞ்சினை பதைப் பதைக்கிறது. எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈழத்தில் கற்பழிக்கப்பட்டனர். இந்திய அரசு, மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் இந்த படுபாதகத்திற்கு உதவி செய்கிறது. இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. ஐக்கியஜனநாயக கூட்டணி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்”