Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகாராஜா ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதலை ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

மகாராஜா ஊடக வலையமைப்பின் பிரதான அலுவலகம் மீது திட்டமிட்ட வன்முறைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை மிகவும் அறுவருக்கத்தக்கதெனக் கருதி வன்மையாகக் கண்டிப்பதாகவும், தற்போதைய மகிந்த ராஜபக்ச  நிர்வாகத்தினர் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதெனவும் ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

விசேடமாக சிரச ஊடக வலையமைப்பை சீர்குலைப்பதற்காக பல சூழ்ச்சிகள் செயற்பட்டுவருவதை நாம் காண்கிறோம். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் தெபானவிலுள்ள அந்த ஊடகத்தின் கலையகக் கட்டிடத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் சிலர் அதனைத் தீயிட்டனர்.
 
 அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிரச நிறுவனத்திற்கு பெறும் அழுத்தங்களை ஏற்படுத்தினர் என்பதும் இரகசியமானதல்ல. எனினும், இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மையான குற்றவாளிகளுக்கெதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. குற்றவாளிகள் தொடர்ந்தும் சுதந்திரமாக திரிகின்றனர். இம்முறை பட்டப்பகலில் பகிரங்கமாக சிரச ஊடக வலையமைப்பின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதை புறக்கணித்துள்ளதன் காரணமாக வன்முறையாளர்கள் தாம் விரும்பியதைப் போல் சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாணந்துறை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை சமர்ப்பித்து தமது பணியில் ஈடுபட முயற்சித்தனர்.

காவல்துறையினரும் வன்முறையாளர்களும் ஏற்படுத்திய தடை காரணமாக அவர்களினால் பணியில் ஈடுபட முடியாது போனது. சட்டம் ஒழுங்காக அமுல்படுத்தப்படாததன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

சட்டத்தைக் கவனத்தில் கொள்ளாது எப்படியான வன்முறையிலும் ஈடுபடும் சுதந்திரத்தை ராஜபக்ச நிர்வாகம் சமுகமயப்படுத்தியுள்ளது. சிரச மீது மேற்கொள்ளப்பட்ட தற்போதைய தாக்குதல் அரசாங்கத்தின் தேவைக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கூறுவதற்கு நியாயமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தச் சென்ற வன்முறையாளர்கள் சிரச ஒளிப்பதிவாளர்களினால் படம்பிடிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்~ அரசாங்கம் தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறந்த சந்தரப்பம் கிடைத்துள்ளது. சட்டத்தை சரியாக அமுல்படுத்தி உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி அரசாங்கம் தான் நிரபராதி என்பதை நிருபிக்க வேண்டும் என ராஜபக்ச அரசாங்கத்திற்கு சாவல் விடுப்பதாகவும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார்.

Exit mobile version