Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராடினால் தான் ஜெயிக்க முடியும்- உமாசங்கர்.

போலிச்சான்றிதழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட்ட தமிழக அரசு அவரை டான்சி நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது

. வருகிற திங்கட்கிழமை பொறுப்பேற்க இருப்பதற்கு முன்னால் நேற்று சென்னையில் செய்தியாளர்களை குடும்பத்தோடு சந்தித்த உமாசங்கர், கூறியதாவது…என் மீது 2 குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக ஒன்று, சாதி சான்றிதழ் பொய்யானது என்பது மற்றொன்று. இப்போது சஸ்பெண்ட் உத்தரவை அரசு ரத்து செய்துள்ளது.சஸ்பெண்ட் செய்யப்பட்டதே சட்டத்திற்கு புறம்பானது. சஸ்பெண்டை ரத்து செய்ததால் என்னுடைய விளக்கத்தை தருகிறேன்.என்னிடம் 2 சொத்து தான் இருக்கிறது. 98-ல் ஐ.ஏ.எஸ். சங்கம் மூலம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஒன்றேமுக்கால் கிரவுண்டு நிலம் மாதவரம் அருகில் கடன் வாங்கி, வாங்கியிருக்கிறேன். அதில் பாதி எனது மூத்த சகோதரருக்கு சொந்தம். 2-வது 2003-ல் 10 லட்சம் மதிப்புள்ள 20 வருடம் பழமையான வீடு 900 சதுர அடியில் வாங்கியிருக்கிறேன். அதற்கு இன்னும் வங்கி கடன் பாக்கி இருக்கிறது.அது சிறிய வீடாக இருப்பதால் ரூ.25 ஆயிரம் வாடகை, ரூ.2 ஆயிரம் பராமரிப்பு செலவுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். 2003க்கு பிறகு நான் எந்த சொத்தும் எனது பெயரிலோ, என் மனைவி பெயரிலோ வாங்கவில்லை.எனது தாய் கிறிஸ்தவர், தந்தை இந்து. நான் பத்தாவது வகுப்பு படித்தவரை எனது பெயர் அசோக் என்பதாகும். எனது ஜாதி கிறிஸ்தவ பள்ளர் என்பதாகும். இந்த நிலையில் 1984ம் ஆண்டு எனது தந்தை இந்து மதத்திற்கு மாறினார். அப்போது எனது பெயரை உமாசங்கர் என மாற்றினார். இதற்கு முழுமையான ஆதாரம் உள்ளது. இதற்கு பின் சட்டப்படி சாதி சான்றிதழ் வாங்கியிருக்கிறேன்.நிலம், உறவினர்கள் இருக்கும் இடத்தில் தான் சான்றிதழ் வாங்க முடியும். இது எனது விருப்பம். பின்னர் இந்து பெண்ணை, இந்து முறைப்படி திருமணம் செய்திருக்கிறேன். 2 வருடங்களுக்கு முன் கிறிஸ்தவனானேன். சட்டப்படி இன்று நான் இந்து தான். நம்பிக்கையின்படி நான் கிறிஸ்தவன்.யு.பி.எஸ்.சி. நான் ஐ.ஏ.எஸ். சேரும் முன்பும், பின்பும் இருமுறை சான்றிதழ்களை சரிபார்த்து சரியானவை தான் என்று சான்றளித்திருக்கிறது. திங்கட்கிழமை புதிய பதவியில் சேருகிறேன். சாதி சான்றிதழ் சரிபார்ப்பு விசாரணைக்காக திருநெல்வேலி கலெக்டர் அழைத்திருக்கிறார். அதனை சட்டப்படி சந்திப்பேன். சரிபார்ப்பு பணிகள் சட்டப்படி நடக்கவில்லை என்றால் கோர்ட் படி ஏறி இறங்குவேன்.யாராலும் எனக்கு நெருக்கடி கொடுக்க முடியாது. யாருக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. கொஞ்சம் கூட வளையமாட்டேன். என் வேகம் குறையும் என்று நான் யோசிக்கவில்லை.சஸ்பெண்ட் உத்ரவை ரத்து செய்ததற்காக அரசுக்கு நன்றி. எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அரசியல்வாதிகள்-அதிகாரிகள் எந்த அளவு நெருங்க முடியுமோ அந்த அளவுதான் நான் பழகியிருக்கிறேன், அதை மீறியதில்லை.என் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக நான் குற்றம் இழைத்துள்ளேன் என்பதை நிரூபித்தார்களேயானால், எனது குடும்பத்தோடு நந்தனம் சிக்னலில் பொதுமக்கள் பார்க்க தற்கொலை செய்து கொள்கிறேன். இதை உறுதியாகச் சொல்கிறேன்.எனக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் அரசு சார்பி்ல் சலுகை விலையில் இடம் கிடைத்தது. ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், முன்பணம் கட்ட என்னிடம் அப்போது பணம் இல்லாததே. இதை பின்னர் ஒரு கூட்டத்தில் சுட்டிக் காட்டிப் பேசிய முதல்வர் கருணாநிதி, தன்னைத்தேடி பணம் வந்தாலும் கூட அதை வாங்க மாட்டார் உமாசங்கர். அவர் ஒருவரால் மட்டுமே அப்படி இருக்க முடியும் என்று வாயார பாராட்டினார் என்றார் உமாசங்கர்.உமாசங்கருடன் உடன் இருந்த அவரது மனைவி சூரியகலா கூறுகையில், எனது கணவர் எடுக்கும் முடிவுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். போராடினால் தான் ஜெயிக்க முடியும். எனக்கும் போராட்ட குணம் இருக்கிறது. இல்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பேன் என்று ஆவேசமாக கூறினார். உம்சாங்கருக்கான தமிழக பல்வேறு சக்திகளும் குரல் கொடுத்தது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version