Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுநலவாய மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

இனக்கொலையாளி ராஜபக்சவைத் தூக்கிலிடப்போவதாக அறிவிப்பதும், சில காலங்களுக்கு மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்தி இலங்கை அரசைக் காப்பாற்றுவதும் அந்த இடைவெளிக்குள் தமது பல்தேசிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதும் வழமையாகிவிட்டது. இலங்கையில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டோடு கூடவே நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்ட நிறுவனங்களில் goldshield-pharmaceuticals என்ற பல்தேசிய பெருவியாபாரிகளும் அடங்குவர். இலங்கையில் பல வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றி பிரித்தானியாவின் தேசிய நலனை உறுதிப்படுத்தியதாக அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரன் பாராளுமன்ற உரையின் போது கூறியிருந்தார். இன்று goldshield-pharmaceuticals இன் உதவித் தலைவர் டொம் ஹிக்கின்ஸ் இலங்கையுடன் பொது நலவாய மாநாட்டின் போது சுகாதாரத் துறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் இலங்கையில் நானோ தொழில் நுட்பத்தை மருத்துவத்தில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொமன்வெல்த் மாநாட்டின் போதே இந்த பல மில்லியன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முதலாவது நானோ தொழில் நுட்பம் இலங்கை நோயாளிகளிடம் பரிசீலக்கப்படுகின்றது. மனிதர்களை சில இரவுகளுக்குள் கொத்துக்கொத்தாகக் கொலைசெய்வது எப்படி என்று வன்னி மண்ணில் பரிசோதித்தது போன்ற இன்னொரு ஆரம்பமா என்ற கேள்விகள் எழுகின்றன.
பிரித்தானியா போன்ற ஏகபோக அரசுகளின் பிடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக சிங்கள மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவே இலங்கையின் இலவச மருத்துவத்தையும் இலவசக் கல்வியையும் அழித்து ஏகபோக அரசுகளுக்கு விற்பனை செய்யும் மிருகத்தனமான வியாபாரி.

தெற்காசியாவில் சிறந்த இலவச மருத்துவச் சேவை இலங்கையிலேயே காணப்படுகிறது. மருத்துவத்திற்கு என ஐ.எம்.எப் அண்மையில் இலங்கை அரசிற்குக் கடன் வழங்கியிருந்தமை அறிந்ததே. மக்களின் உழைப்பில் வரிகட்டப்படும் ஐ.எம்.எப் இன் கடன் தொகை பிரித்தானிய பல்தேசிய நிறுவனத்திற்கு இலாபமாக வழங்கப்படும்.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ் பிழைப்புவாதத் தலைமைகள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனை அடுத்த ‘தேசியத் தலைவர்’ ஆக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் அணிதிரட்டப்படுவதும் அதற்கான தந்திரோபாயங்கள் வகுக்கப்படுவதுமே இன்றைய பிரதான அரசியல் கடமை. போராட்டத்தினூடாக  மட்டுமே இலங்கையில் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும்.

இலவசக் கல்வியைத் தகர்க்கும் வெடிகுண்டுடன் இலங்கையில் இறங்கிய இளவரசர் சார்ள்ஸ்
உலகவங்கி இலங்கைக்கு மீண்டும் கடனுதவி : இலவச மருத்துவம் முற்றாக அழிக்கப்படும்
இலங்கையின் இலவச மருத்துவ சேவையையும் கட்டண சேவையாக மாற்றும் மகிந்த அரசு

 

Exit mobile version