Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கப்படுத்துகிறார்!

  
   13வது அரசியல் சாசனத் திருத்தத்திற்கு அமைய, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் யோசனைத் திட்டத்தை தாக்கல் செய்வதை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கப்படுத்தியுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல்சபைக் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற சூடான கலந்துரையாடலின் போது திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் போது, ஏன் தீர்வுத் திட்ட யோசனையை முன்வைக்கவில்லை என ஜயம்பதி விக்ரமரத்ன கடுமையாக கேள்வியெழுப்பியுள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்த தீர்வு யோசனைத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் குறித்துக் 
 
  கலந்துரையாடுவதற்கு இவ்வாறு காலத்தை இழுத்தடிப்பு செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில், இதன் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு 76 தடவைகள் கூடியதாகவும், அதன்பின்னர் 2002ம் ஆண்டு அரசியல் சாசன திருத்த யோசனையை முன்வைத்ததாகவும் ஜயம்பதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டத்தின்போது இவ்வாறு சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், தர்மசங்கடத்தை எதிர்கொண்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண செய்வதறியாது, தம்முள் ஒளித்துவைத்திருந்த இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு அதிகாரத்தைப் பகிர்வது குறித்த யோசனைத் திட்டத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறும், இதற்காக மேலும் நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளுமாறும், ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன இதன்போது தெரிவித்துள்ளார்.

தமிழர் சமுகத்தினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இந்த யோசனைத் திட்டத்தை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், இதனைத் துரிதப்படுத்துவதற்கான தேவையில்லை எனவும் ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக மேலும் குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் அதற்கு எதிராக செயற்பட்டமையும், அவர்களை ஜனாதிபதி சாடினார் என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும் சித்தரிக்கப்பட்ட நாடகம் எனவும் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.

அதிகாரத்தைப் பகிர்வதற்கு ஜனாதிபதி தயார் எனவும், ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் உள்ளவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் காட்டிக்கொள்ளவே இவ்வாறான செய்தியும், சம்பவங்களும் சித்தரிக்கப்பட்டதாக இந்தக் கலந்துரையாடலின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பிக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை ஜனாதிபதி சாடினார் என்ற செய்தியை, டளஸ் அழகப்பெருமவின் ஊடகப் பிரிவே சித்தரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Exit mobile version