Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேய்கள் கட்டளையிடுகின்றன.!!!!! : பிடுங்கி

எல்லாப் பேய்களும் ஏறிமிதித்துப் போட்ட- என்னை

மறுபடியும் மிதிக்கத் துடிக்கின்றன ரை கட்டிய பேய்கள்.

வாய்குவித்து, வசைமொழிகளைத் துப்பி

ஆட்சேர்த்துக், கொடியுயர்த்திப் பணம் சேர்க்க

கட்டாயமாக நான் வரவேண்டுமாம்.

பேய்கள் கட்டளையிடுகின்றன.

கொத்துக்கொத்தாக குரலேயறுந்து

கொடூரமாகக் கொலையுண்ட – என்

முன்னோரின் சாம்பலைப் பூசியபடியே

தானே அடையாளம் தானே அடையாளம்

என்கின்றன புதுப் புதுப் பேய்கள்.

ஜெனிவாவில்.நீயூயோர்க்கில்

சிட்னியில்,ரொறன்ரோவில்,

பாரிஸில்,பேர்லினில் எனக்

குரலோசை போட்டுப்

பணம் சேர்க்கத் துடிக்கின்றன

பலான பேய்கள்.

ஆளுக்கொரு பேரில் அலைமோதும்…..

எந்தப்பேய் என்னைத் தாவும்- என்று

அறியாதவனாய் எல்லாத் தெருவிலும்

நான் பயத்தொடு அலைகின்றேன்..

இந்தப் பேய்கள் நான் பேசும் மொழி தெரிந்தவராயில்லை.

நான் உடுத்தும் உடை அணிபவராயில்லை.

என்னுடைய பழக்கவழக்கங்களும் அவரிடத்து இல்லை.

என்றாலும் ……..

எனக்குப் பிரதிநிதிகள் தாங்களே என்றபடி

மல்லுக்கு நிற்க்கின்றார்கள்.

நாவரளக் கத்து என்பவர்கள் -நான்

கத்துவதற்கும் சேர்த்து என்னிடமே காசு பறிக்கின்றார்கள்.

நெஞ்சை நிமிர்த்தி நீதி கேட்கும்

வல்லமை என்னிடமில்லையென்பதால்

என்னைப் பிடித்தாட்டிப் போகிறது பேய்கள்.

நாடுவிட்டகன்று கட்டிடக்காட்டினுள்

கவனிப்பாரற்றுக் கிடக்கிற

என்னைத் திரட்டித் தன்னை உருவாக்கத்

தவியாய் தவிக்கின்றன இப்பேய்கள்.

பொறுக்கிப் போடப் பெட்டிகளும்,

கூட்டிப் போகப் பேருந்துகளும் தயார்…..

இனியென்ன

பிணங்களைக்காட்டி வாக்குப் பிச்சையெடுக்கும் பேய்களுக்கு

எதையும் சுற்றத் தயாராகவிருக்கும்

செக்குமாடென்னை பிடித்தாட்டுவதென்பது ஒரு பொருட்டா?????????

Exit mobile version