Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பூமிக்கு மேலே மூன்று புதிய பாக்டீரியாக்கள் : இஸ்ரோ கண்டுபிடிப்பு!

17.03.2009.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்று மில்லியன் டாலர் கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல் பகுதியில் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரோவின் இந்த கண்டுபிடிப்பு மூலம் பூமியைத் தாண்டி வேறு ஒரு கிரகத்தில் வேறு உயிரினங்கள் இருக்கலாம் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.

இஸ்ரோ கடந்த 2005ல் 459 எடை கொண்ட பலூன் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக பூமிக்கு மேல் 20 முதல் 41 கிமீ., வரையிலான தூரத்தில் நிறுத்தியது. பின்னர் அந்த பலூன் பாராசூட் மூலம் பூமிக்கு வந்தது.

அதில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையத்தில் வைத்து ஆராயப்பட்டது.

இந்த ஆராய்ச்சின் முடிவில் இது வரை பூமியில் அறியப்படாத மூன்று பாக்டீரியாக்கள் விண்வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிர் நிறைந்த பிரபஞ்சத்தில் பதிலளிக்க முடியாத கேள்விகள் ஒன்று வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா… இல்லையா என்பது தான். இந்த கேள்விக்கு தனது புதிய கண்டுபிடிப்பின் மூலம் பதில் தந்துள்ளது இஸ்ரோ.

பூமிக்கு மேல் 40 கிமீ., தூரத்தில் புற ஊதா கதிர்களிலில் இருந்து தப்பி உயிர் வாழ்வது என்பது எந்த உயிரினத்துக்கும் இயலாத காரியம் என்பதால் இந்த பாக்டீரியக்கள் விண்வெளியின் வேறு பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த மூன்று பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு பாசில்லஸ் இஸ்ரோனேன்சிஸ் என இஸ்ரோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு பாசில்லஸ் ஆர்யபட்டா என இந்திய வானசாஸ்திர முன்னோடி ஆர்யபட்டாவின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பாக்டீரியாவுக்கு ஜேனிபாக்டர் ஹோய்லை என பெயரிடப்பட்டுள்ளது.

விண்ணியல் விஞ்ஞானி பிரெட் ஹோயில் என்பவரின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ கூறுகையில், புனே, இன்டர் யுனிவர்சிட்டி பார் அஸ்ட்ரானமி அண்ட் பிசிக்ஸ் துறையை சேர்ந்த ஜெயந்த் நர்லிங்கர் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்ரோ விஞ்ஞானி யு ஆர் ராவ் மற்றும் பி எம் பர்கவா ஆகியோர் இவருக்கு இந்த ஆராய்ச்சியில் துணை நின்றனர் என்கிறது.

இந்நிலையில் இந்த பாக்டீரியாக்கள் முன்பு பூமியில் உள்ள எரிமலை பகுதிகளில் வசித்திருக்கலாம். அவை எரிமலை வெடிப்பின் போது துகள்களுடன் சேர்ந்து விண்ணில் பறந்திருக்கலாம். பின்னர் அது அங்குள்ள சூழலுக்கு வாழ பழகி கொண்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

எது எப்படியோ… பூமிக்கு மேல் 40 கிமீ., உயரத்தில் பாக்டீரியா வாழ வழியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதையே காட்டுகிறது.

இருப்பினும் விண்வெளியில் வேறு உயிரினம் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில், திரவ நிலையில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் பீனிக்ஸ் விண்கலம் கண்டுபிடித்தது.

அதேபோல, 1989ம் ஆண்டு நாசாவின் டிஸ்கவரி விண்கலத்தில் பயணித்த ஒரு விண்வெளி வீரர், வித்தியாசமான வேற்று கிரக விண்கலத்தைப் பார்த்ததாக தெரிவித்தார்.

2004ம் ஆண்டு, மனிதனின் காலடியைப் போன்ற தடம் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை மார்ஸ் எக்ஸ்ப்ளோரர் படம் பிடித்து அனுப்பியது.

இப்போது பாக்டீரியாக்கள் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது.

Exit mobile version