Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் தளபதி ஜானும் 40 பேரும் எங்கே? – மனைவி கேள்வி: பிழைப்புவாதிகள் எங்கே?

janswifeஇறுதி மோதல்களின் இறுதி நாட்களில் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவத்தினர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சரணடைந்த தனது கணவரை, இராணுவத்தினர் வட்டுவாகல் பாடசாலையில் கம்பிக்கூட்டில் அடைந்து வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் இளம் மனைவி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதியும் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை மன்னார் மடுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட இருந்த ‘ஜான்’ என்கிற அந்தோனி இராயப்புவின் மனைவியான மிரேனியா இராயப்புவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்படுகொலை அரசு போலி வாக்குறுதிகளை வழங்கிப் போராளிகளையும் மக்களையும் கைது செய்து இல்லாமலாக்கியுள்ளது. இன்னும் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கூடத் தெரியவரவில்லை. இவ்வளவு அவலங்களும் ஒரு புறத்தில் அரங்கேற மறுபுறத்தில் அவலங்களை வியாபாரமாக்கும் கூட்டம் உலகம் முழுவதும் தம்மை வலுப்படுத்தி வருகின்றது. தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறோம் என்ற தலையங்கத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் அரசியல் தலைமைகள் ராஜபக்சவின் அழிப்பிற்குத் துணை செல்கின்றன.

அவர் தன்னுடைய சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘யுத்தம் நடைபெற்ற வேளையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சரணடையுமாறும், அவ்வாறு சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் அவர்களின் உதவியுடன் 40 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் முல்லைத்தீவு பகுதியில் சரணடைந்தனர். இதில் எனது கணவர் அந்தோனி இராயப்புவும் இருந்தார். அவருக்கு அப்போழுது வயது 43. எனது கணவர் 23 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றியுள்ளார். பின் வட்டுவாகல் பகுதியிலுள்ள பாடசாலை முகாமில் கம்பிக்கூட்டில் அடைத்து வைத்தார்கள். அதன் பின் இதுவரை அவரை காணவில்லை. பின் அவரை தேடி பல முகாம்களுக்கு சென்றேன். இருந்தும் அவரை காண முடியவில்லை.

பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரை நான் இன்று வரை காணவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சில தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எனது கணவர் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதனாலேயே அவர் சரணடைந்தார். ஆனால், அவருடன் சரணடைந்த 40 பேருக்கும் என்ன நடந்தது என இன்று வரை தெரியவில்லை.

இவ்வாறான சூழலில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு முறையாவது அவரை பார்த்தால் எனக்குப் போதும். அல்லது அவர் இருக்கிறாரா, இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் மிக கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்த சூழலில் சிலர் மது போதையில் எனது வீட்டிற்கு வந்து அவர் வந்திட்டாரா? அவர் எங்கே என சொல்லி என அச்சுறுத்தி வருகிறார்கள். நான் முச்சக்கர வண்டியில் சென்றால் மூச்சக்கர வண்டி சாரதியை ஏன் ஏற்றிச் சென்றாய்? எங்கே கூட்டி சென்றாய்? என அச்சுறுத்தி வருகிறார்கள். எனது வீட்டிற்கு வருபவர்களை அச்சுறுத்தி வருகிறார்கள். வரவர நான் மிகவும் பயத்தில் வாழ்ந்து வருகிறேன். எனவே, எனது கணவர் இருக்கிறாரா இல்லையா என தெரிவிக்க வேண்டும். அவர் நிச்சயமாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்றுள்ளார்.

இதன்போது, குறுக்கிட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, ‘உங்களைச் சில ஆணைக்குழு அதிகாரிகள் பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு ஒத்துழையுங்கள், அதன் மூலம் கணவரை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

இதனை அடுத்து பதிலளித்த மிரேனியா இராயப்பு, ‘இவ்வாறு பல வாக்குகள் ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டு இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனக்கு எதுவித உதவிகளும் வேண்டாம். எனவே எனக்கு எனது கணவரை ஒரு முறையாவது பார்த்தால் போதும். இராணுவத்தினரே அவரை வைத்துள்ளனர். எனவே அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version