Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை யுத்தம் தொடரும் : அமைச்சர் பிரியதர்ஷனயாப்பா

புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையிலும் யுத்த நிறுத்தம் குறித்து அரசாங்கம் சிந்திக்காது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாத இலக்குகள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை மேற்கொள்வதனால் விமானத் தாக்குதல்களை நிறுத்துவது குறித்தும் எவ்வாறான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகவியலõளர் மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர்கள், புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? விமானத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை (கவுன்சில்) கூட்டத்தில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்புக்கு இணங்க முடியாது. புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கின்ற வரையிலும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும். மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புலிகள் வசமிருந்த இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னாரிலிருந்து உகணவரையிலான அரை வட்டத்திற்குள் உலாவித்திரிந்த புலிகளை முல்லைத்தீவு , கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குள் முடக்கியுள்ளோம்.

புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்புக்கு இணங்கி தொண்டைக் குழிக்குள் மீண்டும் சிக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. இலங்கையில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கையர் என்று வாழும் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. படையினரின் வெற்றியைத் தடுப்பதற்கு ஐ.தே.க. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பயங்கரவாத இலக்குகளை இனங்கண்டே விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வேறு எங்கேயும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படாது. அவ்வாறானதொரு நிலையில் விமானத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை

 

Exit mobile version