Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளால் தாக்கப்பட்ட புகலிட ஊடகவியலாளர்! : செய்தி ஆய்வு

நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது. குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் பத்மநாதன் கிளாஸால் தாக்கியதில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் உடனடிச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

அங்கு சரவணனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு எட்டு தையல்கள் போடப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் இரு வாரங்களாகியும் உடல் உளப் பாதிப்பில் உள்ளார். வலி இருந்த போதும் அதிர்ஸ்ட வசமாக கண்ணில் எந்த பாதிப்பும் வரவில்லை என்றும் சரவணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிறந்ததின வைபவத்தில் சரவணனும் அனைவரையும் போல் கலந்துகொண்டிருந்தார். அங்கு சரவணன் தனக்கு தெரிந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதுää அதில் ஒருவர் நிகழ்ச்சியில் சிங்களப் பாடல்களையும் ஒலி பரப்பினால் நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார். உரையாடலை மேலெழுந்த வாரியாக காதில் போட்டுக் கொண்ட பத்மநாதனும் இன்னும் சிலரும் சிங்களவர்கள் இனவாதிகள் என்று கூறி கதைத்துக் கொண்டனர். இந்த உரையாடல் சரவணனின் காதுகளில் விழவும்ää சிங்கள மக்கள் எல்லோரையும் இனவாதிகள் என்ற சொல்வதை தவறு என்று சரவணன் அங்கு தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவு தான் கையில் இருந்த கிளாஸால் சரவணின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் பத்மநாதன்.

அப்போது சரவணனின் நண்பர்கள் முரண்படவும் அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு நான் என்ன செய்ததற்காக இப்படி அடித்தீர்கள் என்று சரவணன் கேட்டு உள்ளார். தனது செயலுக்கு துளியும் வருந்தாத பத்மநாதன் இவர்கள் இயக்கத்திற்கு எதிரானவர்கள் என்று தனது செயலை அங்கு நியாயப்படுத்தியும் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போது இது அரசியல் வன்முறை என்ற காரணத்தினால் முறைப்பாடு புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டு இருப்பதாக நடராஜா சரவணன் இன்று (ஓகஸ்ட் 3) தேசம்நெற் இற்குத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தன்னை மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட சரவணன் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே பயப்பட வேண்டி உள்ள ஒரு வன்முறைச் சூழலில் வாழ்வதையிட்டு தனது வேதனையை வெளியிட்டார். இச்சூழல் புலம்பெயர் தேசத்திலும் தொடர்வது அச்சத்தைத் தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1992 முதல் ஊடகவியலாளராக செயற்பட்டு வரும் சரவணன் ‘சரிநிகர்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் ‘உயிர்ப்பு’ சஞ்சிகைக் குழுவிலும் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 முதல் நோர்வே வெளிநாட்டு ஊடக அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் நோர்வேயில் வெளியான ‘பறை’ சஞ்சிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐநா உடன்பாட்டிற்கு அமைய நோர்வேயில் அரசியல் தஞ்சம் வழக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் சரவணனும் ஒருவர். ஏனையவர்கள் ஐநா உடன்பாட்டிற்கு வெளியே மனிதாபிமான அடிப்படையிலேயே தஞ்சம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தேசம்நெற்

அண்மைக்காலங்களின் புலம் பெயர் நாடுகளில் அரசியல் வன்முறைகள் தனிநபர் தாக்குதல்களாக உருவெடுத்து ஜனநாயகம் விரும்பும் சக்திகளை அதிர்ச்சிக்குள்ளாகிறது. புலிகளின் பாசிசத்தின் கோரக்கரங்கள் புகலிடம்வரை விரிந்து சிந்திக்க விளையும் மனிதர்களை சிதைத்தும் சீரழித்தும் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை அழிவின் விழிம்பில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. புலிகளின் கொடூர வன்முறைகளோடு கைகோர்த்திருக்கும் புலியெதிர்ப்பு வன்முறைகளும் இன்னுமொரு பாசிசத் தளத்தைக் கட்டியெழுப்ப முனைவதனூடாக ஜனநாயகப் போராடங்களையும் சிதைத்து அதிகாரத்திற்காகத்திற்காக அலைமோதுகின்றன.

புலிகளின் பாசிசத்திற்கெதிராக புதைகுழியின் விழிம்பிலிருந்து போர்க்குரல் எழுப்புவதாகக் கூறிக்கொண்ட வன்முறையாளர்கள் எவருமே சரவணன் மீதான தாக்குதலைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பாரீஸ் தாதா குகன் நடாத்திமுடித்த கொலை முயற்சியை நியாயப்படுத்தியதில் நேரமிழந்துபோன இவர்கள் சரவணனை மறந்து போனதில் ஆச்சர்யமில்லை.

கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களின் மனிதப் பிணங்களின் மேல் தமது அதிகாரக் கோட்டையை கட்டியெழுப்ப முனையும் புலி, புலியெதிர்ப்பு குழுக்களின் முகத்திரைகளைக் கிழித்து அம்பலப்ப்டுத்துவதென்பது ஒவ்வோரு ஜனநாயகம் விரும்பும் தனிமனிதனதும் கடமை.

Exit mobile version