இலங்கைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்கான டெஸ் பிரவுண் என்ற முன்நாள் பிரித்தனியப் பாதுகாப்பமைச்சர் தலைமையிலான விசேட குழுவின் வரவை நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தக் குழு எந்த வகையிலும் உதவிபுரியாதெனவும், இரு நாடுகளிடையேயான உறவு மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும் எனவும் பிரித்தானிய அரசிற்குத் தெரிவித்து நிராகரித்திருந்தது.
ஆனாலும் இந்த அறிவிப்பை மேற்கொள்வதற்கு முன்னதாகவே பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபன் மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், இதன் போது மகிந்த ராஜபக்ஷ விஷேட குழுவிற்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் நம்பியிருந்தார் என பிரித்தானிய வெளியுறவுச் செயலக வட்டாரங்கள் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளன என அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை இலங்கை அரசின் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு மறுபடி தொலைபேசியில் உரையாடிய மிலிபான், இலங்கை அரச வட்டாரங்களைத் திருப்திசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார் எனத் தெரிவித்த வெளியுறவுச் செயலகம், இலங்கை வெளியுறவுச் செயலகம் வார இறுதியில் ஆலோசனைகளின் பின்னர் மேலதிக முடிபுகளை மேற்கொள்ளும் என கருத்து வெளியிட்டுள்ளது.