Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

  25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் ப்யன்படுத்தப்பட்டுள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலைசெய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சின் பிரதான பத்திரிகைகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியாகியுள்ள இச்சம்பவமானது, பி.பி.சி சிங்கள் சேவை உள்பட பல தமிழ் இணையங்களால் திரிக்கப்பட்டு புலிகளுக்கு எதிரான செய்தியாக மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version