
மாணவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த நால்வர் வலுவான காரணங்களின்றி பாசிசச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைகழகம் பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆரம்பமாகிறது. மாணவர்களைக் கைது செய்வதற்குக் காரணமாக அமைந்த துணைக்குழுத் தலைவர்கள் பிரித்தானியாவில் மாணவர்கள் குண்டு வீசினார்கள் என நேர்காணல் வழங்கும் நிலையில் பல்கலைக் கழகம் ஆரம்பமாகிறது.
உலகம் முழுவதும் மாணவர் உரிமைக்காகப் போராடும்மாணவர் அமைப்புக்களோடும், போராட்ட அமைப்புக்களோடும், இலங்கை எங்கும் காணப்படும் சிறிய வெகுஜன அமைப்புக்களோடும், சிங்கள மாணவர் அமைப்புக்களோடும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இறுக்கமான உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டிய புதிய காலத்தில் வாழ்கிறார்கள்.
பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் நான்கு இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தமை மாணவர்கள் தமது நண்பர்களையும் எதிரிகளையும் இனம் கண்டுகொள்வதற்கான ஆரம்பப்புள்ளியாகும்.
எரியும் தேசத்தில் போர் விழுங்கிய உரிமைகளுக்காக மாணவர்கள் துணிந்து குரலெழுப்பியமைக்காகப் பெருமையடையலாம்.