ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்தியா எல்லாவகையிலும் பாதுகாத்து வருவதோடு இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாற்றி வருகிறது. இந்து தீவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் ஆபத்தானதுதான். இந்நிலையில் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லி வந்துள்ள அவர், புதன்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசமும் உடன் இருந்தார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா எழுப்பிய சந்தேகங்களுக்கு பசில் ராஜபக்சே விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் குறித்து கிருஷ்ணா கவலை தெரிவித்தார். இறுதியில் பசில் தெரிவித்த விளக்கங்களில் திருப்தியடைந்த கிருஷ்ணா தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பசில் சொன்னதை அப்படியே ஒப்புவித்தார். பசிலின் வருகையை ஒட்டி விரைவில் கிருஷ்ணா கொழும்பு செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.