Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீதியான அரசியல் தீர்வே இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்!:ரொறன்டோ கருத்தரங்கில் வலியுறுத்தல்!!

20.08.2008.

“இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் மூலமே யுத்தம் நிறுத்தப்படும்” என்று இலங்கையின் எதிர்காலம் என்ன? என்ற தலைப்பில் ரொறன்டோ கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 17, 2008 ம் திகதி ரொறன்டோ கனடாவில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் முக்கிய பேச்சாளர்களாக முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும், தற்போது Rensselaer Polytenic Institute USAல் கடமையாற்றுகின்றவரும், இலங்கையின் சமாதானத்திற்காக வேண்டி நிற்பவருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் இரத்தினம் ஜீவன் கூல், சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த John Argue (Amnesy International Canada, Sri Lanka Coordinator) மற்றும் நம்மொழி சஞ்சிகை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலை சமாதானத்திற்கான கனேடியர்கள், நம்மொழி சஞ்சிகை, கருமையம் மற்றம் ளுடுனுகு ஒழுங்குபடுத்தியிருந்தனர். நான்கு நோக்கங்களை மையமாக வைத்து இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது

தென்னிலங்கையில் உள்ள அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து செய்யப்படுகின்ற குண்டுத்தாக்குதலைக் கண்டித்தல்,
இலங்கையின் அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் கொல்லப்படுவதையும், இலங்கை மக்களின் உரிமையை இலங்கை அரசு பறித்துள்ளதையும் கண்டித்தல்,
முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு நீதியானதும். கௌரவமானதுமானதுமான அரசியல் தீர்வு முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்,
சகலவிதமான கொலைகளையும், ஆட்கடத்தல்களையும், மனித உரிமை மீறல்களையும், அழிவை நோக்கிச் செல்லுகின்ற யுத்தத்தையும் நிறுத்தும் பொருட்டு, இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று வலியுருத்துதல் என்பனவே இந்த நோக்கங்கள்.

பேராசிரியர் இரத்தினம் ஜீவன் கூல் பேசும் போது “ஒவ்வொரு இலங்கையனும் தனது சுதந்திரத்தையும், நலனையும், அபிவிருத்தியையும் தேடிக் கொள்ளக் கூடியதும், இவற்றிற்காக மற்றவர்களின் உரிமைகளை மதிப்பதுமான சூழ்நிலையை வலியுறுத்துகின்றேன்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது “சமாதானம் என்பது பிரிவினைக்கு எதிரானது அல்ல. சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும் தங்களுக்குள் மோதுப்படாமல், தனியான நிலப்பிரிவுக்குள் இருந்து கொண்டு தமது நல்வாழ்வைப் பேணுவது சாத்தியமானதே. இலங்கையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு பல காரியங்கள் தமிழர்களாலும், முஸ்லீம்களாலும், மிகக் கூடுதலாக சிங்களவர்களாலும் செய்யப்படவேண்டும். இலங்கையின் சமனற்ற அரசியல் சமூகங்களுக்குள் சிங்கள மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கின்றது. அவர்கள்தான் அரசியல் தீர்வைக் கொடுக்க வேண்டியவர்கள்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

நம்மொழி சஞ்சிகை ஆசிரியர் பாஸ்கரன் பேசும் போது “வடக்கு கிழக்கு முஸ்லீம்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும்” என்று வலியுறுத்திப் பேசினார்.

“முஸ்லீம் களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு இல்லை. அவர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்பாணம், மன்னார் என்று எல்லா இடங்களிலும் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்கும் கௌரவமானதும், நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். அது முடியும். இதற்கு உதாரணமாக இந்தியாவில் உள்ள பாண்டிச் சேரியை எடுத்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியின் அரசியல் அதிகாரம் தமிழ் நாட்டுக்குள் உள்ள ஒரு நகரத்திற்குள்ளும், கர்நாடகாவில் உள்ள ஒரு நகரத்திற்குள்ளும், ஆந்திராவில் உள்ள ஒரு நகரத்தினுள்ளும் உள்ளது. அது போல ஒரு அதிகார அரசியல் தீர்வுதிட்டத்தை வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு வழங்குவதில் எந்த கஸ்டமும் கிடையாது” என்று நம்மொழி பாஸ்கரன் பேசினார்.

1984ம் ஆண்டில் இருந்து 2008 வரைக்கும் பத்து தடைவ இலங்கைக்கு சென்று வந்தவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடா தொடர்பாளருமான John Argue பேசும் போது ” இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு பாரிய அளவிளான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றது” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது, கொலை செய்யப்படுவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபை அம்பலப்படுத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இலங்கை அரசின் அமைச்சர் ஊடகவியலாளர்கள் மீது நடாத்திய வன்முறைகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை அம்பலப்படுத்துகின்ற செய்யதியையும் அவர் தெரிவித்தார்.

இதே சமயம் கனடாவில் தமிழ் ஊடகவியாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட John Argue இவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version