Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிதி தொடர்பான முரண்பாடே காரணம்: மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் (பத்மினி) சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் கருணா நாடு திரும்பிய பின்பு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தார்.மாவட்ட ரீதியில் கருணாவிற்கும் அவரிற்குமிடையிலான தேர்தலுக்கான நிதி தொடர்பான முரண்பாடே காரணம் என பரவலாகப் பேசப்படுகின்றது.

அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தவாறே எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இதனால் தனக்கோ தனது பதவிக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் குறித்த செய்தியாளர் மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வந்துகொண்டிருந்த வேளை கொழும்பில் வைத்து தனது பாதுகாப்பிற்காக வந்தவர்களில் 15 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காக தான் யாருடனும் சோந்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவை ஆதரிக்க தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸிலிருந்து விலகி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருந்த பிரதி அமைச்சர் நிஜாமுடீன் ,பேரியல் அஷ்ரபின் கட்சியைச் சேர்ந்த சேகு இசதீனும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தீர்மானித்துள்ளனர்.

Exit mobile version