சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமாக நாஜி பாணி வதை முகாமில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளதாக பன்னாட்டு சட்ட நிபுணரும், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக சட்டப் பேராசிரியருமான பாய்ல் தெரிவித்துள்ளார்.
அதாவது 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை பிரகடனத்தின் பிரிவு 2சி பிரிவின் கீழ் இது இலங்கை அரசின் இனப்படுகொலைச் செயல் என்று பாய்ல் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சட்டப்பிரிவு என்ன கூறுகிறது என்றால், “ஒரு குழு அல்லது இனத்தை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ அழிக்கும் வகையிலான ஒரு நிலைமையை அவர்கள் மீது செலுத்துதல்”
இந்தப் பிரிவின் கீழ் தற்போது 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை முகாம்களில் வைத்திருக்கும் செயல் இலங்கை அரசின் இனப்படுகொலை செயல் என்று பாய்ல் கூறியுள்ளார்.
1948ஆம் ஆண்டு இனப்படுகொலை பிரகடனச் சட்ட (1948 Genocide Convention) விதிகளில் கையெழுத்திட்டுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இதுபோன்ற வதை முகாம் பாணியிலான இனப்படுகொலை முயற்சிகளை எதிர்த்து அதனை தடுக்க பன்னாட்டு சட்ட விதிகளின்படி உரிமையுண்டு. ஆனால் இதுவரை இந்த நாடுகள் வன்னியில் நடைபெறும் இதுபோன்ற இனப்படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார் பேராசிரியர் பாய்ல்.
இது போன்ற இனப்படுகொலை செயல்களை இந்த நாடுகள் தடுக்கவில்லையெனில், இனப்படுகொலை பிரகடனம் பிரிவு 3இ-யின் கீழ் இலங்கை அரசுடன் இந்த நாடுகளும் குற்றம்புரிந்த நாடுகளாகவே கருதப்பட இடமுண்டு. இந்த சட்டப்பிரிவு இனப்படுகொலைக்கு தடை விதித்துள்ளதோடு அதனை கிரிமினல் குற்றமாகப் பார்க்கிறது என்று பாய்ல் மேலும் எச்சரித்துள்ளார்.
இந்த நாடுகள் ஏற்கனவே இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விதிகளை கேலிக்கூத்தாக்கியுள்ளன என்று சாடியுள்ளார் பாய்ல் என்பது குறிப்பிடத்தக்கது.