இலங்கையில் “இனிவருங் காலங்களில் அரச அல்லது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவதில்லை என்றும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும்” எனும் விவகாரம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்த விடயம் குறித்து நீண்ட ஆலோசனைகளை அமைச்சரவை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் சிங்கள தலைவர்கள், தேரர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு தங்கள் சிங்கள இனப்பற்றினையும் ஜனாதிபதிக்கான விசுவாசத்தினையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பொய்மையில் கட்டமைக்கப்பட்ட வாதங்களை முன்வைத்து தங்கள் சிங்கள மேலாண்மை வாதக்கருத்துக்களை பரப்பி இனவாத்தினைத் தூண்டி வருகிறார்கள். சிங்கள – தமிழ் பேசும் மக்களை மொழிரீதியாக பிரித்தாளவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
மற்றொரு புறும் தமிழ் தலைவர்கள் – பத்திரிகைகள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சருமான ஹெகலிய ரம்பக்வெல வியாழக்கிழமை (16.12.2010)நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், “நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை அவரவர் தங்கள் மொழிகளில் பாடலாம். தமிழ் மக்கள் தமிழில் பாடலாம்: சிங்கள மக்கள் சிங்கள மொழியில் பாடலாம்.” எனத் தெரிவித்திருப்பதுடன் , “இது தொடர்பாக தவறானதொரு கருத்தாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பில் தேசிய கீதம் பற்றி அனைத்தும் கூறப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பில் உள்ளவற்றையே நாம் கூறுகிறோம்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தேசிய கீதம் தொடர்பான விவகாரத்தில் அதிகம் பேசியவர் விமல் வீரவன்ச. அதுபற்றிக் குறிப்பிட்ட ஹெகலிய ரம்பக்வெல, “தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடவேண்டும். தமிழில் பாடமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார். அது அவரது மொழி உரிமை” எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹெகலிய ரம்பக்வெல, 1978 ஆம் ஆண்டின் பின்னர்தான் இந்த நிலைமை வந்தது. அதற்கு முன்னர் சிங்கள மொழியிலேயே பாடப்பட்டது எனவும், தமிழ் மக்களுக்கு தமிழில் பாடும் உரிமை இருக்கிறது. எனினும் இசை வடிவத்தை மாற்றமுடியாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்;.
அமைச்சரவையில் இவ்விடயம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்களை வெளியிட மறுத்த ஹெகலிய ரம்பக்வெல, “அமைச்சரவை என்பது நம்பிக்கைக்குரிய அலுவலகம். அதில் நடந்தவற்றைக் கூறமுடியாது” எனக்கூறியதுடன் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் ஒருபகுதியையும் வாசித்துக் காட்டியிருக்கிறார். இலங்கை தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடி என்பன கடந்த காலங்களில் அவமதிக்கும் வகையில் கையாளப்பட்டதை அடுத்து அவற்றை எப்படி மதிப்பது என்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாகவே அன்றைய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தேசிய கீதம் தொடர்பான இனவாத சர்ச்சைகளை அமைச்சரவை ஏற்படுத்தவில்லை. தனிப்பட்ட நபர்கள்தான் அதனை ஏற்படுத்தினார்கள். அது அவர்களது மொழி உரிமை என்ற தோறற்ப்பாட்டை ஹெகலிய ரம்பக்வெல உருவாக்க முனைந்துள்ளார்.
ஆயினும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பொதுச் பொதுச்செயலாளர் விஜித கேரத் (பா.உ.), பல்லின மக்கள் வாழும் நாட்டில் தமது சொந்த மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அப்போதுதான் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்படும், ஆனால் அரசாங்கம் தமிழில் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு விதித்துள்ள தடையினால் தமிழர்களின் இதயங்களில் இலங்கை தொடர்பான எண்ணங்கள் மென்மேலும் அந்நியப்பட்டுப் போய் பிரிவினைவாதமே தோற்றுவிக்கப்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக மேற்படி தடையை முன்மொழிந்தமையால் உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது குறித்த விடயம், தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது போன்று தோன்றுகிறது.(அதற்கான காரணங்கள்?) ஆயினும் பல சிங்களத் தலைவர்களின் சிங்களப் பற்றினை தெட்டத் தெளிவு படுத்தியிருக்கிறது. அதே வேளை, அரசுடன் இணக்க அரசியல் நடத்தி வரும் தமிழ் மற்றும் இடதுசாரி தலைவர்களுக்குப் பல சங்கடங்களை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கருணா, டக்ளஸ் குறித்த தகவல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் ஆற்றி வருகிற சேவைகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆயினும் இந்த அம்பலப்படுத்தல்களால் ஆடிப்போகும் சாதாரண மனிதர்கள் அல்ல அவர்கள் ! அவர்களின் தமிழ் மக்களுக்கான சேவைகள் தொடரும். தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
எதற்கும் வெட்கம் அடையாத ஒரு கூட்டம் இருக்கும் வரை அவர்கள் பணி தொடரும்.