Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு எதிராக இலங்கைப் பேரினவாத சக்திகள்

மட்டக்களப்பு, கல்லடியில் இராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் கடந்த நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளுக்கு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் குழுக்களாலும் விநியோகிக்கப்பட்டிருந்தது.

தமிழிலும் சிங்களத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்த துண்டுபிரசுரத்தில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஐஐகுயு இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெற விடாது தடுத்து இலங்கை ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் அவமானப்படுத்த முனைந்த தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையிலும் தங்கியுள்ளது என்பதை காண்பிக்கவும் எதிர்வரும் 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கில் தென்னிந்திய சினிமா எதிர்ப்பு வாரமாக பிரகடனம் செய்து 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கு சினிமா அரங்குகளில் இந்திய தமிழ் படங்களை திரையிடுவதை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு படமாளிகையினரையும் ரசிகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட இந்த துண்டு பிரசுரத்தின் கீழ் சுதந்திர இலங்கையின் தமிழர்கள் என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் இராணுவன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் திரையிடப்பட இருந்தது.

இதை தடுக்கும் முகமாகவே திரையரங்கிற்குள் கடந்த நள்ளிரவு புகுந்த சிலர் திரையரங்கின் திரைக்கு தீவைத்துள்ளனர். இதனால் திரை முற்றாக எரிந்துள்ளது.

Exit mobile version