Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தெகிவளை மசூதி மீது சிங்கள பௌத்த பேரினவாதிகள் தாக்குதல் – அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

நேற்று வெள்ளிக்கிழமை -25.05.2012- பிற்பகல் 3.00 மணியளவில் இரண்டு பஸ் வண்டிகளில் பௌத்த துறவிகள் தலைமையில் சென்ற குண்டர்கள் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு அருகில் உள்ள கல் விஹாரை வீதியிலுள்ள தருள் ரஹ்மான் மசூதி மீது கற்களைக் கொண்டு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
மசூதி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதனையடுத்து கல் விஹாரை முன்பாகக் கூடிய பிக்குகள் தலைமையிலான காடையர்கள், அங்கிருந்து ஊர்வலமாக மீண்டும் மசூதிக்கு முன்பாக வந்து அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரி மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
நிலைமைகள் கட்டுமீறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உடனடியாகவே பொலிஸார் அப்பகுதிக்குக் குவிக்கப்பட்டு மசூதி மீதான தாக்குதலைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தெஹிவளையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version