Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு- வைகோ.

ஈழப் போரின் போது இந்தியா செய்த உதவிகளையும் அதற்குத் துணை போன கருணாநிதியின் துரோகங்களையும் மறைக்கவே செம்மொழி மாநாடு நடத்தப்படுவதாக வைகோ குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை உள்நாட்டுப் போரில், ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுத்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு உதவியது இந்திய அரசு; அதற்கு உடந்தையாக இருந்தது தமிழக தி.மு.க., அரசு. அப்பிரச்னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தமிழக முதல்வர் கருணாநிதி, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார்.உண்மையில், இது செம்மொழி மாநாடல்ல; ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் மாநாடு. செலவிற்கு பணம் கொடுத்து இலவசமாக பஸ்களில் மாநாட்டிற்கு தி.மு.க.,வினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி, அந்த அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. அதற்காக, ம.தி.மு.க., சார்பில் கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை சாலையில் மறிப்பது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம். அங்கு புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.இந்த அணைப் பிரச்னையில் நாங்கள் மத்திய, கேரள அரசுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம்; தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்றார்.

Exit mobile version