திமுக கூட்டணி எம்பிக்கள் இன்று மதியம் இரண்டு மணிக்கு மகிந்த ராஜபட்சேவை சந்தித்து மறு குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை விடுத்த போது அச்சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் அக்குழுவினருடன் ராஜபட்சேவைச் சந்திக்க வில்லை. ஆனால் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் தனியாகச் சந்தித்து மீள் குடியேற்றம் தொடர்பாக வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அவர் சந்திப்பதற்கான நேரத்தை பிரதமர் அலுவலகம் ஒதுக்கியதா? என்பது குறித்த தகவல்கள் இல்லை. தமிழக எம்பிக்கள் டில்லி சென்ற போது திருமாவும் சென்றிருந்தார். ஆனால் இச்சந்திப்பால் எழும் தர்மசங்கடங்களைத் தவிர்க்கவே சந்திப்பைத் தவிர்த்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராஜபட்சேவைச் சந்தித்த திமுக கூட்டணி எம்பிக்கள் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற எம்,பியும் தொழிலதிபருமான டி.ஆர் பாலு செய்தியாளர்களிடையே பேசும் போது. ” முகாம்களில் எண்பதாயிரம் பேர் இல்லை என்றும் ஐம்பதாயிரம் பேர் வரையான மக்கள் மட்டுமே இருப்பதாகவும் ராஜபட்சே தெரிவித்தார். தேர்தல் வேலைகள் நடந்த காரணத்தால் மீள் குடியேற்றம் தாமதமாகி விட்டது. இனி விரைந்து மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதியளித்திருக்கிறார்” என்றார் டி,ஆர். பாலு.