Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலித் மக்கள் ஆலய நுழைவு போராட்டம் வெற்றி !

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் மாத்தூரில் உள்ள மாரியம் மன் கோவிலில் நீண்டகாலமாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய களஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து டிசம்பர் 30 அன்று தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்று வாலிபர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் டிசம்பர் 26 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னி லையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிசம்பர் 28 திங்களன்று காலை, செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் கோட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மண்டலத் துணை வட்டாட்சியர், வாலிபர் சங்கத் தலைவர்கள், மாத்தூர் தலித் மக்களின் தலை வர்கள், சாதி ஆதிக்க சக்தியினரின் பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திங்களன்று மதியமே அரசு – காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலய நுழைவும், வழிபாடும் நடை பெறும். தொடர்ந்து தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆர்டிஓ, டிஎஸ்பி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில் கருவறை சாதி ஆதிக்கச் சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்துவிட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர்.

Exit mobile version