Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ச் சிவில் சமூகத்தின் அறிக்கையை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் பற்றிய எமது சிறு குறிப்பு : இராயப்பு யோசேப்பு

தமிழ்ச் சிவில் சமூகத்தினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 13 டிசம்பர் 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வறிக்கை தமிழ் அரசியல் சமூகத்திற்குள் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் முக்கிய விவாதமொன்றுக்கு வழிவகுத்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த முயற்சியை விளங்கிக் கொண்டு அவ்வறிக்கை எழுப்பியிருந்த விடயங்களை முன்னிறுத்தி ஆதரவாகவும் விமர்சன ரீதியாகவும் இவ்விவாதத்திற்குப் பங்களித்த, பங்களித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள். எமது இந்த முயற்சிக்கு அரசியல் சாயம் பூசி, தனிப்பட்ட ரீதியில் கையெழுத்துட்டுள்ளவர்களைத் தாக்கி எழுதியும் பேசியும் வருவோருக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றையும் நாம் சொல்ல விரும்பவில்லை.

நாம் வெளியிட்ட அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தினது அரசியலைப் பலப்படுத்துவதும் அதனூடாக அதனது தெரிவு செய்யப்பட்ட சனநாயகப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் திடப்படுத்துவதுமே எமது நோக்கங்களாகும். எம்மில் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு பலமுறை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காலத்திற்குக் காலம் உரையாடி வந்துள்ளோம். ஆழந்த யோசனையின் பின்னரே இவ்விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஓர் வெளிப்படுத்தல் ஒன்றைச் செய்வதென்ற முடிவுக்கு நாம் வந்தோம். எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் எமக்கு இல்லை என்பது இவ்வறிக்கையானது ஒரு தேர்தலை முன்வைத்து முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதிலிருந்து தெளிவாகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி இவ்வறிக்கை கருத்துத் தெரிவித்திருந்தாலும் அத்தேர்தல் தொடர்பாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளிவராத சூழலிலேயே எமது அறிக்கை வெளிவந்திருப்பதை ஈண்டு நோக்க வேண்டும்.

தேர்தலில் த.தே.கூ நேரடியாகப் பங்குபற்றக் கூடாது என்று தெரிவித்திருந்தாலும் மாகாண சபை என்ற நிறுவனம் அரச சார்பு கொண்ட தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள் வசம் போவதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக அறிக்கையிலே குறிப்பிட்டிருப்பதையும் அறிக்கையை நிதானமாக வாசித்தவர்கள் நிச்சயமாக கவனிக்காமல் விட்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசுவதற்கான மக்கள் ஆணையை தன்னகத்து கொண்டவர்கள். தாம் பெற்ற ஆணையின் பாற்பட்டு அவர்கள் செயற்பட வேண்டும் என்பதே எமது அறிக்கையின் சாராம்சம். இதனைச் சொல்வது எவ்வாறு ஒற்றுமைக்குக் குந்தகமாக அமையும் என்பதனை எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்தில் பயனெதுவுமில்லை. எமது அறிக்கையில் நாம் குறிப்பிட்டவாறு தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையானது தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

எந்த மக்கள் சார்பில் அரசியல் செய்யப்படுகின்றதோ அம்மக்களுடன் தொடர்ச்சியாக எமது அரசியல் தொடர்பில் உரையாடல் ஒன்றைச் செய்யும் போதே அந்த அரசியல் உண்மையானதாகவும் மக்கள் மயப்பட்டதாகவும் இருக்க முடியும். இதற்கான வெளியை உருவாக்குவதே எமது அறிக்கையின் நோக்கமாகும். எம்மோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச முன் வந்துள்ளதை நாம் வரவேற்கிறோம். இது தொடர்பிலான திரு. இரா. சம்பந்தனது கடிதத்திற்கு இன்று நான் பதிலொன்று அளித்துள்ளேன். சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் த.தே.கூ தலைவர்களுக்குமிடையிலான இந்த சந்திப்பு விரைவில் இடம்பெறுமென்பது எமது எதிர்பார்ப்பு.

(ஒப்பம்)

அதி. வண. இராயப்பு யோசேப்பு
மன்னார் பேராயர். ஜனவரி 16, 2012
(தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில்)

Exit mobile version