Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் கொல்லப்பட்ட போது கொண்டாடிய இனவாதிகள் இன்று துன்பப்படுகின்றனர்

இன்று நாடளாவிய ரீதியில் கடத்தல், காணாமல்போதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுத்த காலத்தில் தமிழர்கள் பலியானபோது பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்த சிங்கள இனவாதிகள் இன்று அல்லல்படுகின்றனர். அவர்களின் மரணமே அரசாங்கத்தின் இறுதிப் பயணமாகும் என்று 26 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்ங்க முக்கியஸ்தர்கள், இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக அமைப்புகளின் அங்கத்தவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுநலன்சார் அமைப்புக்களை சோ்ந்தோர் நேற்று மருதானையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதில் கடத்தல், காணாமல் போதல் உள்ளிட்ட சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் வகையில் 26 அமைப்புகளைச் சோ்ந்தோர் பங்கேற்றனர்.

அவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பிரேம்குமார் குணரட்ணம் என்றொருவர் நாட்டுக்குள்ளேயே பிரவேசிக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பியது எவ்வாறு?

ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டு அவரது கழுத்தில் கால்களை வைத்து நசுக்கிக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவினால் அவர் விடுவிக்கப்பட்டார்.

சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான அழுத்தங்களினால் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர். அது சந்தோசஷமான விடயம் என்றாலும் இந்த நடவடிக்கை இத்துடன் நின்றுவிடும் என்று சந்தோஷமடைய வேண்டியதில்லை.

ஏகாதிபத்திய அரசாங்கத்தின் பயணம் தெட்டத்தெளிவாகிவிட்டது. கடத்தப்பட்டு காணாமல்போன ஒருவர் காலை 6.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு நபர் அன்றையதினமே காலை 7.10 மணியளவில் விமானத்தின் மூலம் வெளிநாடொன்றுக்கு சென்றது எவ்வாறு?

மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

சர்வதேச ரீதியிலிருந்தும் தூதரகங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அவ்விருவரையும் விட்டுவிட்டு அரசாங்கம் தலைகுனிந்து நிற்கின்றது.

அரசாங்கம் கைதுசெய்யவில்லை என்று பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்படாத, கடத்தப்படாத இருவர் எவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்படியாயின் நாட்டு மக்களுக்கு பொய்களை கூறிய இவ்விருவரும் உடனடியாக பதவிவிலக வேண்டும்.

குணரட்ணம் கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அந்த விவகாரத்தில் முதல் எதிரியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அடுத்த எதிரியாக பொலிஸ் மா அதிபரும் இருக்கின்றனர். அவ்விருவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து கடத்திய அரசாங்கம் சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு தனது நிர்வாணத்தை சிங்கக்கொடியினால் மூடிமறைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் நாட்டுக்குள் வருகைதராத ஒருவர் எவ்வாறு வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்? இன்றேல் அரசுக்குள் ஓர் அரசு இருக்கின்றதா? அப்படியின்றேல் அரசுக்கு வெளியே ஓர் அரசு செயற்படுகின்றதா?

அரசாங்கம் டைட்டானிக் கப்பலை போல மூழ்க ஆரம்பித்துள்ளது. புலிகளும் பாதாள உலகக் கோஷ்டியினரும் இல்லையெனில் இவ்வாறான கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யார்? கடத்தப்பட்ட இருவரையும் விடுவித்தவர்கள் யார்?

கடத்தப்பட்ட ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாடு சென்றிருந்தால். குற்றப்புலனாய்வு பிரிவு வெளிநாட்டு முகவர் நிலையமாக செயற்படுகின்றதா? இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கோரி நின்றன

Exit mobile version