Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழருவி மணியன் விவாகரம் கருணாநிதிக்கு நீதிமன்றம் சூடு.

தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்தவர் தமிழருவி மணியன் அனைவராலும் மரியாதைக்குரியவராக் கருதப்படும் தமிழருவி மணியன் துவக்கத்தில் கருணாநிதியை ஆதரித்து வந்தார். அவருக்கு சென்னையில் குடியிருக்க வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஈழப் போராட்டத்தை ஒட்டி கருணாநிதியின் நாடகங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழருவி கடும் விமர்சனங்களை கருணாநிதி மீது தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறினார். தமிழகமெங்கிலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்தார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி தமிழருவி மணியனுக்குக் கொடுத்த வீட்டை காலி செய்ய வீட்டு வசதி வாரியத்தின் மூலம் உத்தரவிட்டார். ஆனால் காலி செய்ய மறுத்த தமிழருவி நீதிமன்றம் சென்று இப்போது வெற்றியும் பெற்றிருக்கிறார். தமிழருவி குடியிருந்த வீட்டுக்கான குத்தகையை 19 மாதங்களாக புதுப்பிக்கவில்லை. “தொடர்ந்து அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்க உரிமையில்லை; எனவே, வீட்டை காலி செய்து வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தமிழருவி மணியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழருவி மணியன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த ஐகோர்ட், குத்தகையை புதுப்பிக்க வீட்டு வசதி வாரியத்தை அணுக உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்திடம் விண்ணப்பித்தார். மனுவை நிராகரித்த வாரியம், குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழருவி மணியன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு, குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை என்பதை மனுதாரர் நிரூபித்துள்ளார். மனுதாரரை மட்டும் தனியாக பிரித்து பாரபட்சம் காட்ட முடியாது.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலை அளித்தும், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து வீட்டு வசதி வாரியம் பதிலளிக்கவில்லை. எனவே, மனுதாரர் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்தக் காரணத்தை வாரியம் கண்டுபிடித்துள்ளது. வீட்டு வசதி வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டு உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’ என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும்.தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, “தமிழ் வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும். இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக வீட்டு வசதி வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version