Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டி.ஆர். பாலு அமைத்து வரும் சாராய தொழிற்சாலை : அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

baaluதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி கிராமத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அமைத்து வரும் எரிசாராய தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி நாளை வட்டாட்சியம் அலுவலகம் அருகே அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக
இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிறுவனங்களுக்காக நான்கரை லட்சம் கியூபிக் மீட்டர் வாயுவை பெற்றார்.

வளம் கொழிக்கும் இலாக்காக்களில் இருந்து கிடைத்து வந்த வருமானம் தற்போது பறிபோய் விட்டதால், வருமானத்தைப் பெருக்க ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், விவசாயத்தை பாதிக்கக்கூடிய, நீராதாரத்தை அழிக்கக்கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஒரத்தநாடு தாலுகாவில் அடங்கிய வடசேரி கிராமத்தில் அசிடிக் அமிலம் உற்பத்தி செய்து வந்த டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமான கிங்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது முடங்கிக் கிடக்கிறது. பொதுமக்களின் விவசாய நிலங்களையும், நீராதாரங்களையும் அழித்தாவது முடங்கிப் போயுள்ள தன் நிறுவனத்தை நிமிர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், அசிடிக் அமிலம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான எரிசாராயத்தையும் வடசேரியிலேயே உற்பத்தி செய்ய டி.ஆர். பாலு திட்டமிட்டுள்ளார்.

தி.மு.கவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி எரிசாராய தொழிற்சாலை என்று குறிப்பிடாமல் பின்தங்கிய வடசேரி பகுதியில் தொழில் துவங்கப்போவதாக பொய்யான தகவலை ஊராட்சிக்குத் தெரிவித்து, அதன் அடிப்படையில் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்ற வைத்திருக்கிறார் டி.ஆர். பாலு.

இந்தத் தீர்மானம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version