Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதா விலை உயர்வை கண்டித்து நாடகம் : குழந்தைகளுக்கும் சிறை

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!
பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம். ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வர், விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து ”உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

இந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து “ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்” என்று மிரட்ட தோழர்கள் “அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம், ஏன் கைது செய்கிறீர்கள்?” என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று அழாத குறையாக விளக்கம் சொன்னது போலீசு.

தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 7 குழந்தைகள், பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.

அன்று மாலையே அதில் பத்து பேரைத் தவிர மற்றவர் அனைவரும் 60 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. அதிலும் ஜெயாவின் வேடமணிந்து நடித்ததை ஏதோ மாபெரும் தீவிரவாத நடவடிக்கை போல சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.

பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. எனினும் புரட்சிகர அமைப்புகள் பேயாட்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். சிறை, மிரட்டலெல்லாம் அவர்களை அச்சுறுத்தாது. தற்போது திருச்சி சிறையில் சிறைவாசிகள் மத்தியில் பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தி தோழர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காவல் துறை என்ன செய்யும்? ஒருவேளை வழியிருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்துவார்களோ?

நன்றி : வினவு

Exit mobile version