Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெனிவா பேச்சுவார்த்தை: இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

31.082008
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக கூட்டமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சகர் மாநாட்டில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரே நாளில் இந்தியா அந்தர் பல்டியடித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வசதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது விவரம் தெரிந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்திடும் நோக்குடன் உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization – WTO), ஒவ்வொரு நாடும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான தீர்வைகளை (Import Duty) முற்றிலும் நீக்கவேண்டும் என்று கோரி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தீர்வைகள் விதிக்கப்படுவதையே வர்த்தகத் தடை என்றும், அதனை முற்றிலுமாக நீக்குவது உலகளாவிய அளவில் தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்த வழி வகுக்கும் என்றும் கூறி வருகிறது.

உலகளாவிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. பொருளாதார உலகமயமாக்கல் திட்டத்தை நிறைவேற்ற, நாடுகளுக்கிடையே சமமான வணிக வாய்ப்பை ஏற்படுத்த முற்பட்டபோது, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் (Developed Nations) தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கும், அவர்களின் உற்பத்திக்கும், இடுபொருட்களுக்கும் அளித்துவரும் மானியம் பிரச்சனையானது.

ஏனெனில், இவ்வாறு மானியம் அளித்து உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்கள் சர்வதேச சந்தைக்கு வரும்போது அவைகளின் விலை மிக மிக குறைவாக (Competitive) இருப்பதால், வளர்ந்துவரும் நாடுகள் (Developing Nations) என்றழைக்கப்படும் இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளின் பொருட்களுக்கு (அதிக விலையின் காரணமாக) போதுமான சந்தை வாய்ப்பு கிடைக்காத நிலை உருவானது. குறிப்பாக தங்களது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்க முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகள் இந்த தடையற்ற வர்த்தகத்தால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்று இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் எச்சரித்தன.

அமெரிக்கா தனது நாட்டு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 200 பில்லியன் டாலர்கள் (1 பில்லியன் = 100 கோடி) அளவிற்கு மானியம் வழங்கி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அளிக்கும் மானியம் ஆண்டிற்கு 300 பில்லியன்களுக்கு மேல். இது எந்த அளவிற்கு என்று பார்த்தோமானால், நமது நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பைக் காட்டிலும் மிக மிக அதிகமாகும். ஒவ்வொரு நாளும் சாராசரியாக 2 பில்லியன் டாலர்களை மானியமாக தங்கள் விவசாயிகளுக்கு வளரும் நாடுகள் அளித்து வருகின்றன.
இவ்வளவு மானியம் பெற்று உற்பத்தியாகும் பொருட்கள் சந்தைக்கு வரும் போது அதற்கு ஈடாக மற்ற நாடகளின் விளைபொருட்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? உதாரணத்திற்கு சர்வதேசச் சந்தையில் அமெரிக்க கோதுமை மிக மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அதனை நமது நாட்டில் இறக்குமதி செய்து விற்க அனுமதித்தால் நமது விவசாயிகளின் உபரி உற்பத்தியை யார் வாங்குவார்கள்? இதுவே பிரச்சனை.

உலகளாவிய பொருளாதார மயமாக்கலுக்கு தடையான இப்பிரச்சனைக்கு முதலில் தீர்வு கண்டாக வேண்டும் என்று அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் தலைநகர் தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா குரல் கொடுத்தது.
அன்று இந்தியாவின் தொழில்- வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தோஹா மாநாட்டில் எழுப்பிய குரலிற்கு மூன்றாம் உலக நாடுகள் ஆதரவளித்தன. உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் ஒருபுறமும், இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் மறுபறமும் அணி திரண்டன.

விவசாய மானியப் பிரச்சனைக்கும், வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக (வளர்ந்துவரும்) நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களின் மீது இறக்குமதி குவிப்பு வரி என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்வைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுத்தன. இந்த கோரிக்கைக்கு வளர்ந்த நாடுகள் செவிசாய்க்காததால் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

2001ஆம் ஆண்டு தோஹா மாநாட்டில் எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அதன் பிறகு மெக்சிகோவின் கான்கூன் நகரிலும், பிறகு ஹாங்காங்கிலும் நடந்த அமைச்சர்கள் மாநாட்டில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. தங்களுடைய நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் இறங்கி வராத காரணத்தால் தீர்வு காண முடியாமல் முட்டுக்கட்டை நீடித்தது.

இதற்கு தீர்வு காணத்தான் ஜெனிவாவில் தற்பொழுது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெனிவா மாநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசியநமது தொழில் – வர்த்தக அமைச்சர் கமல் நாத், நமது நாட்டின் விவசாயிகள் நலனை விட்டுக்கொடுக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று கூறினார். பிரச்சனைக்குத் தீர்வு காண வளர்ந்த நாடுகள் அளித்த ஆலோசனையை நிராகரித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, அர்ஜெண்டினா உள்ளிட்ட வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் கூட்டு முயற்சியை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள நாமா-11 (Non-Agriculture Market Access-11 – NAMA-11) என்ற அமைப்பையும் உருவாக்கின.

இந்த நிலையில்தான், நேற்றைக்கு முன்தினம் அமெரிக்கா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தனது விவசாயிகளுக்கு அளித்துவரும் மானியத்தில் 15 பில்லியன் குறைப்பதாக அறிவித்தது.

இது குறித்து உடனடியாக கருத்து தெரிவித்த அமைச்சர் கமல்நாத், “அமெரிக்கா அதன் விவசாயத் துறைக்கு அளித்து வரும் மானியத்தை குறைப்பதாக கூறியுள்ளது. உலக சந்தையில் தற்போது உள்ள உணவு தானியங்களின் விலையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா அறிவித்துள்ள மானியம் மிக சொற்பமே. அது யதார்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு விவசாய மானியத்தைக் குறைக்க முன்வரவேண்டும். வளர்ந்த நாடுகள் உண்மையாக விட்டுக் கொடுக்க வேண்டும். வளரும் நாடுகளிடம் இருந்து இலாபம் கிடைக்குமா என்று எதிர்பார்க்க கூடாது” என்று கூறினார்.

ஆனால் மறுநாளே, தான் தெரிவித்த கருத்திற்கு மாறாக, அமெரிக்கா அறிவித்துள்ள மானியக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும், அதனை பின்பற்றி மற்ற வளர்ந்த நாடுகளும் விவசாய மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி, “அமெரிக்கா 15 பில்லியன் டாலர் அளவுக்கு மானியத்தை குறைத்திருப்பதாக கூறியுள்ளதை கேள்விப்பட்டவுடன், எனக்கு உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்திற்கான அறிகுறி இது. இதனைப் பின்பற்றி மற்ற வளரும் நாடுகளும் முயற்சி மேற்கொள்வார்கள் என்று கருதுகிறேன்” என்று அந்தர் பல்டியடித்துள்ளார்.

200 பில்லியன் அளவிற்கு மானியம் வழங்கிவரும் அமெரிக்கா, வெறும் 15 பில்லியன் மானியம் குறைக்கப்படும் என்று அறிவித்ததை முதலில் கடுமையாக எதிர்த்துவிட்டு, பிறகு அதனை வரவேற்பதாக அமைச்சர் கமல்நாத் கூறியதற்கு என்ன காரணம்? அவரும் தெளிவுபடுத்தவில்லை, அரசும் தெளிவுபடுத்தவில்லை.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்றுவிட்ட இரண்டே நாளில், கடந்த 8 ஆண்டுகளாக சர்வதேச அளவில் நாம் கடைபிடித்துவந்த ஒரு முக்கிய நிலைப்பாட்டில் ஒரு தலைகீழ் மாற்றம் எவ்வாறு ஏற்பட முடியும்?

இந்த கேள்விக்குப் பதில் இன்று கிடைத்தது. அமெரிக்க அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் அழைத்து பேசியது குறித்து வந்துள்ள செய்தியில், அவர்கள் இருவரும் அணு சக்தி ஒப்பந்த நிறைவேற்றம் குறித்து பேசியது மட்டுமின்றி, ஜெனிவா பேச்சுவார்த்தை தொடர்பாகவும் பேசியுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைக்குத் தீர்வு காண வளர்ந்த நாடுகளும் பங்களிக்க (விட்டுத் தர) வேண்டும் என்று புஷ் பேசியுள்ளார். “அமெரிக்காவின் அறிவிப்பை ஏற்று மற்ற நாடுகளும் மானியத்தைக் குறைக்க வேண்டும்” என்று கமல்நாத் பேசியதும் ஒன்றாகவே உள்ளது.

நமது நாட்டு மக்கள் இந்த விவகாரத்தை – குறிப்பாக விவசாயிகள் – உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நமது நாட்டின் விவசாயிகள் நலன் காப்பாற்றப்படுகிறதா? விட்டுத்தரப்படுகிறதா? விரைவில் புரிந்துவிடும்.

THANKS:www.webdunia.com

Exit mobile version