Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனநாயகமும் நண்பர்களும்! : துடைப்பான்

 இன்றைய நாளில் பலராலும் பேசப்படுகின்ற மலினப்பட்ட சொல்லாடல்கள் எவையென நாம் நோக்கின் அவை ஜனநாயகம்,  மனித உரிமை ,மாற்றுக்கருத்து போன்ற வகைப்பட்டதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது.
 
 
புலிகளிலிருந்து கருணா என்ற முரளிதரன் பிரிந்த பின்னாலான காலத்திலிருந்தும் இன்று இலங்கை அரசினால் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னாலான காலத்திலும் புகலிடச் சூழலில் எமது ஜனநாயக  நண்பர்களிடம் ஏற்பட்ட ‘அதிகார ஆசை’  மேலான அதிக பட்ச காதலை,  மோகம் பற்றிய எம் அவதானிப்பை பெரியதொரு ஆய்வாகவே செய்ய முடியும்.  வேண்டாம் அதனை விட்டுத்தள்வோம்.
 
புலிகளிலிருந்து கருணா பிரிந்தவுடன் கருணா “இலங்கை ஜனநாயகக் குடியரசின்” தலைசிறந்த ஜனநாயக சக்தியாக, தமிழ்பேசும் மக்களின் அரசியல் காவலானாக, மனித உரிமைகாப்பாளனாக கிழக்கின் விடிவெள்ளியாக புகலிட ஜனநாயக நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டார்.       அதுவரை காலமும் புலிகளின் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருந்து, பிரபாகரனின் செல்லக் குழந்தையாய் இருந்து தமிழ் பிரதேசங்களில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அனைத்துவகை ஜனநாயக அழிப்புக்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு ஜனநாயக காவலனாக நண்பர்களால் முடிசூடப்பட்டார்.
 
அதிகார ஆசைகளை உள்ளொடுக்கி பதுக்கி வைத்திருந்த நண்பர்களின் ‘அதிகார ஆசை’ கருணாவின் பின்னால் சென்றடைய கருணாவின் பிரிவுக்கு தத்துவார்த்த காரணங்களை மெழுகிட வேண்டிய சூழ்நிலை நண்பர்களுக்கு  உருவாகிற்று. கிழக்கு அபிவிருத்தியோடு இரண்டறக்கலந்த கிழக்குவாதம் இவர்களுக்கு அருமையான அதி மருந்தாக அமைந்துவிட்டது. அதுவரை கிழக்கில் பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் பக்கம் எந்தப்பார்வையையும் கரிசனையையும் அற்றிருந்த இந்தக் கூட்டம் மக்கள் நலம் பற்றி புலம்பத் தொடங்கிற்று.
 
இக் காலங்களில் இப் புலம்பல்களின் பின்னால் நானும் சேர்ந்து ஓலமிடவேண்டுமென எமது நண்பாகள் குழாம் விரும்பிற்று.  கருணாவின் ஆதரவு நிலை நண்பர்கள் குழாத்தை தீவிர அரச ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி தள்ளியது. இவை அனைத்தையும் அங்கீகரிப்பாளனாக நான் மாறவேண்டுமென அப்பாவித்தனமாக நண்பர் குழாம் விரும்பியது .கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் எந்தவித உடன்பாடற்றவனாக நான் இருந்தேன்.
 
இக் காலங்களில் கலை இலக்கிய அரசியல் தளங்களில் மிகுந்த செயல்பாட்டாளாகளாக நாமிருந்தோம்.  இலக்கிய சந்திப்பென்றும், நண்பர்கள் வட்டமென்றும் ,சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் என்றும் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். 
 
பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் சார்பில் வருடத்தில் சாராசரி எட்டு கருத்தரங்குகளை நடாத்தினோம். இதுவரை சுமார் தொண்ணூறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகளை பிரான்சில் நடாத்தியுள்ளோம்.  இவ் அனைத்து உரையாடல்களிலும் பிரதான தொனியாக ஒலித்தவை, அதிகாரத்திற்கும் மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையாகவே அமைந்தவை. 
 
 இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ,நடாத்தப்பட்ட இவை அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.
 
சமூகத்தில் நாம் பேசுகின்ற எழுதுகின்ற அக்கறைகளுக்கு ஏற்றவாறு வாழவேண்டுமென்ற கருத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டவனாக நான் இருக்கிறேன். இந்த ஐரோப்பிய முதலாளித்துவ சூழலில் இவை மிகுந்த நெருக்கடி நிறைந்த சவாலான சூழல் எனினும் குறைந்த பட்சமாவது நம் அக்கறைக்குரிய சமூக விடயங்களில் நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ முயலுதல் வேண்டுமென்பதே என் அவாவாகின்றது. இவைகளின் முரண்பாடுகளே நண்பர்களைவிட ‘அ’  நண்பர்களை நான் கூடுதலாக உருவாக்கி கொள்கிறேன். நண்பர்கள் எதிரியாகும் இத் தருணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கிறது. நாம் கோட்பாடு சார்ந்த வாழ்வியலில் உண்மையோடும் நேர்மையோடும் வாழ ஆயிரக்கணக்கான எதிரிகளோடு முரண்பாடு கொண்டு வாழ்வில் போராடுவதில் உள்ள மகிழ்ச்சி அளப்பெரியது என்பேன் நான்.

Exit mobile version