தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறியிடப்படாத ஆவணங்களை பார்க்க அனுமதிக்கும்படி கோரி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையும் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.