Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சேடமிழுக்க ஆரம்பித்துள்ள BTF, TCC : இறுதி வேட்டை

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அழிவுகளை நிறுத்த முடியாமல் போனமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று அப்போரட்டம் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகத் தமிழ் இனவாதத்தை முன்வைத்தமையே. இந்த அழிவில் மற்றொரு பக்க்த்தில் பிரதான பாத்திரம் வகித்தவை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து முள்ளிவாய்க்கால் சகதிக்குள் அமிழ்த்தியதில் இப் புலம்பெயர் குழுக்களுக்குப் பிரதான பங்குண்டு.

பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற இரண்டு அமைப்புக்களும் போர்க்குணம் மிக்க உறுதியான போராளிகளை உள்வாங்கி அவர்களை ஏகாதிபத்திய நாடுகளின் உளவுத்துறைகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் அழிப்பிற்குப் பின்பான காலப்பகுதி முழுவதையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எச்ச சொசங்களை அழிப்பதற்காகத் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்ட இந்த அமைப்புக்களின் பிழைப்புவாத நோக்கங்கள் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவையாற்றின.

ஒரு புறத்தில் பிரித்தானிய உளவுத்துறையின் நேரடிப் படையணி போன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட்ட மறு புறத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவை அதன் அரசியல் முகமாகச் செயற்பட்டது.

மக்களின் தியாகமும், வீரமும் அவற்றோடு தொடர்புகளற்ற தலைவர்களால் கன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், ஒபாமாவிற்கான தமிழர்கள் என்றெல்லாம் கொலையாளிகளிடம் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக ஒப்படைத்தன.

உலகம் முழுவதும் படுகொலைகளதும் போர்க்குற்றங்களதும் பின்னணியில் ஏகாதிபத்திய நாடுகளே செயற்பட்டிருக்கின்றன. ஆனால் அழிப்பு நடைபெற்று ஐந்து வருட கால எல்லைக்குள்ளேயே அழித்தவர்களிடம் போர்க்குற்ற ஆதாரங்களையும். அதற்கான விசாரணையையும் ஒப்படைத்தது பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமையே.

அவை அனைத்தையும் தமது பொறுப்பிலெடுத்துக்கொண்ட ஏகாதிபத்திய அரசுகளும் அதன் உப அமைப்புக்களும் இலங்கையில் தமக்கு ஒத்தூதும் அரசாங்கம் தோன்றியதும் கிடப்பில் போட முற்படுகின்றன

.கொலையாளிகளிடம் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்து விட்டு அஞ்சலி நிகழ்வுகளை மட்டும் நடத்தி பணம் சேர்த்துக்கொண்ட புலம் பெயர் அமைப்புக்களுக்கு இன்று வேறு அரசியல் கிடையாது என்ற நிலை தோன்றிவிட்டது.

இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினுள்ளும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் உள்ளேயும் பல்வேறு வெடிப்புக்கள் தோன்றியுள்ளன. அதன் உறுப்பினர்கள் தாம் தலைமையினால் ஏமாற்றப்பட்டுள்ளோம் என உணர ஆரம்பித்துள்ளனர்.

ஏகாதிபத்திய நாடுகள் இனிமேல் போர்க்குற்ற விசாரணை நாடகத்தை அரங்கேற்றப் போவதில்லை. சிறிது சிறிதாக அதனை அழித்து கரைத்துவிடும் நிலை உருவாகியுள்ளது. ஆக, புலம் பெயர் அமைப்புக்கள் சிறிது சிறிதாக அழியும் நிலை தோன்றியுள்ளது.

பிரித்தானியத் தமிழர் பேரவை சேடமிழுக்க ஆரம்பித்துள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமது வழமையான பணம் திரட்டும் செயற்பாட்டை முடுக்கியுள்ளது. பெரும்பாலும் பணம் திரட்டுவதில் இது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இறுதிச் சுற்றாக அமையலாம்.

பணத்திற்கும் பதவிக்குமான இறுதி வேட்டையத் தலைமைகள் நடத்த உண்மையில் வேட்டையாடப்படுவது மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களின் வீரமும் தியாகமும் மட்டுமே.

Exit mobile version