செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழகம் எங்கிலும் உள்ள ஈழ அகதிகளுக்கு கடும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அகதி முகாம்களுக்கு வெளியே பணியின் நிமித்தம் வெளியில் செல்கிற ஈழத் தமிழர்கள் கூட போலீசாரைக் கண்டு அச்சமடையும் சூழல் நிலவுகிறது. போலீஸ் சோதனையில் போது அவர்கள் ஈழத் தமிழர்கள் என்று தெரிந்தாலே போலீஸ் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவதாகவும். போலீஸ் பதிவின்றியோ அல்லது பதிவை முறைப்படி நீட்டிக்காமல் இருந்தாலோ அவர்கள் நிரந்தரச் சிறையான சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது. இதை எல்லாம் விடக் கொடுமை செம்மொழி மாநாடு முடிகிறவரை அகதி முகாம்களில் இருந்து ஈழ அகதிகள் எவரும் வெளியில் செல்லக் கூடாது என்பது கண்டிப்பான உத்தரவு.
தமிழகத்தில் உள்ள எல்லா அகதி முகாம்களிலும் தீவீரமான போலீஸ் கண்காணிப்பும் பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செம்மொழி மாநாடு நடைபெறும் கோவையில் உள்ள அகதி முகாம்களில் வாழும் ஈழ அகதிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். கடந்த பல நாட்களாகவே அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஏதோ குற்றப்பரம்பரையினரைப் போல அவர்களை நடத்துகிறது இலங்கை அரசு. தமிழக அரசு நிர்வாகிக்கும் இந்த அகதி முகாம்களின் இன்றைய நிலைக்கும் வன்னி மக்களுக்காக பேரினவாத இலங்கை அரசு அமைத்துள்ள முகாம்களுக்கும் பாரிய வேறு பாடுகள் இல்லை.
இங்கே உயிருக்கு மட்டும் உத்திரவாதம் இருக்கிறது. ஆனால் அன்றாடம் மன ரீதியாக தங்களை துன்புறுத்துகிறது தமிழக அரசு.