Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாடு : 300 கோடியில் கட்டமைப்பு

“”செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கோவையில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வரங்கங்கள் நடக்கவுள்ள, “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகம் உள்ளிட்ட பல இடங்களை நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநாட்டு பேரணி துவங்கும் இடம், செல்லும் பாதை, முடியும் இடம், முதல்வர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் பார்வையிடுவதற்கான மேடை ஆகியவற்றை எங்கே அமைப்பது என்பதற்காக சில இடங்களை இன்று ஆய்வு செய்தோம். “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் தான் ஆய்வரங்கம், கருத்தரங்கம், முகப்பு அரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கவுள்ளது. மொத்தம் 20 அரங்கங்கள் அங்கே அமைக்கப்பட உள்ளன. தமிழ் இணையதளத்துக்காக மட் டும் மூன்று அரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாடு தொடர்பாக கடந்த 25ம் தேதி, தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கோவை மாநகராட்சி மட்டுமின்றி, அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து, அப்போது ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்துக் கொடுக்குமாறு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 300 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு பெறப் பட்டுள்ளது. அது பற்றியும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கான உத்தரவுகளை முதல்வரிடம் பெற்று, அந்த பணிகளும் விரைவில் துவக்கப்படும்.

இதே காலகட்டத்தில், கோவை மாநகராட்சியில் நடந்து வரும் ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்படும். செம்மொழி மாநாட்டுக்காக தற்போது பூங்கா அமைக்கும் பணி முதலில் துவங்கவுள்ளது. அப்போதே அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். செம்மொழி மாநாட்டுக்கு மத்திய அரசிடம் நிதி கோரும் அவசியமில்லை; எல்லா செலவையும் தமிழக அரசே ஏற்கும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கையில்  முகாம்களில்  தடுத்து வைக்கப்பட்டோரின் பெரும்பகுதியினரைக்  குடியேற்றவும், முகாம்களிலிருந்து  தெருவிற்கு  விரட்டப்பட்டவர்களை  குடியேற்றவும்  300 கோடி இதுவரை  செலவிடப்பட்டவில்லை என தமிழில் அக்கறையுள்ள  அறிஞர்  ஒருவர்  இனியொருவிற்குத் தெரிவித்தார்.

Exit mobile version