Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சமர் கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து 2009 மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகள், இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை, இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். அதையடுத்து, தற்போது சி.பி..ஐயின் இணையத்தளத்தில், தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயரும் படமும் நீக்கப்பட்டுள்ளது.

Exit mobile version