
கற்ற பாடங்கள் மற்றும் இனக்கப்பாடு ஆணையத்தின் முன்பு கடந்த சனிக்கிழமை சாட்சியமளித்த மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப், “ஈழப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வன்னிப் பகுதியிலுள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் 4,29,059 பேர் இருந்தனர் என்று இவ்விரு மாவட்டடங்களின் சிறிலங்க அரசு முகவர் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன. போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களின் எண்ணிக்கை 2,82,380 பேர் என்று 2009ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி ஐ.நா.வெளியிட்ட விவரம் கூறுகிறது. அப்படியானால், 1,46,679 பேர் என்ன ஆனார்கள் என்பதை சிறிலங்க அரசு விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
போருக்குப் பின்னால் தமிழர் பகுதிகள் இராணுவ மயமாக்கப்படுகின்றன, மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன, தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டு சிங்கள மயமாக்கலும், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதும், புத்த மத மயமாக்கலும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் தமிழர் பகுதிகள் காலனி மயமாக்கப்பட்டு வருகிறது என்றும் பேராயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்தியது தமிழர்களின் இன அழிப்புப் போரே என்பதற்கான வலிமையான ஆதாரம் அந்நாட்டு அதிபர் நியமனம் செய்த ஆணையத்தின் முன்பே முதல் முறையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.